“விராட் கோலி சதமடிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. நான் தான் அவர் சதம் அடிக்கட்டும் என்று சிங்கிள் எடுக்காமல் நின்றுவிட்டேன்.” என போட்டி முடித்த பிறகு பகிர்ந்து கொண்டார் கேஎல் ராகுல்!.
உலக கோப்பை லீக் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான போட்டியில் வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 256 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர்கள் லிட்டில் தாஸ் 66 ரன்கள் தன்ஷித் 51 ரன்கள் அடித்திருந்தனர்.
257 ரன்களை சேஸ் செய்த இந்திய அணிக்கு துவக்க வீரர்கள் ரோகித் சர்மா 48 ரன்கள், சுப்மண் கில் 53 ரன்கள் அடித்திருந்தனர். அடுத்து வந்த விராட் கோலி 97 பந்துகளில் 103 ரன்கள் அடித்து தனது 48 வது ஒருநாள் போட்டிகளுக்கான சதத்தை விலாசி போட்டியை பினிஷ் செய்தார்.
இந்த போட்டியில் விராட் கோலி சதம் அடிப்பதே சிக்கலாக இருந்தது. இருப்பினும் அதிரடியாக விளையாடி 90 ரன்களை கடந்திருந்த போது, இந்திய அணியின் வெற்றிக்கு ஏழு ரன்கள் தேவைப்பட்டது. விராட் கோலி சதம் அடிக்க ஏட்டு ரன்கள் தேவைப்பட்டது.
போட்டியின் 41 ஓவர்கள் முடிவில் இந்திய அணி வெற்றி பெற இரண்டு ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அப்போது விராட் கோலிக்கு சதம் அடிக்க மூன்று ரன்கள் தேவைப்பட்டது. முதல் இரண்டு பந்துகளில் ரன் எதுவும் எடுக்கவில்லை. அப்போது ஒரு ரன் ஓடி எடுக்கும் வாய்ப்பு இருந்தது. விராட் கோலி ஓட முயற்சித்த போது கேஎல் ராகுல் தடுத்து விட்டார். மூன்றாவது பந்தில் விராட் கோலி சிக்சர் அடித்து தனது சதத்தை பூர்த்தி செய்தார்.எதிரில் இருந்த கேஎல் ராகுல்-க்கு நன்றியும் கூறினார்.
போட்டி முடிந்த பிறகு இந்த நிகழ்வு குறித்து கேஎல் ராகுல் பேசிய போது,
“விராட் கோலி சிங்கிள் எடுக்க முயற்சித்த போது நான் தான் தடுத்துவிட்டேன். அப்போது விராட் கோலி என்னிடம் ஏன் சிங்கிள் எடுக்கவில்லை? இது தவறாக முடிந்து விடும், ரசிகர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் எனது சொந்த சாதனைகளுக்காக விளையாடுகிறேன் என நினைக்க மாட்டார்களா? என்றார். அப்போது நான் , “நாம் நல்ல நிலையில் இருக்கிறோம். எளிதாக வெற்றி பெறக்கூடிய போட்டியில் நீங்கள் சதமடிக்க நினைப்பது ஒன்றும் தவறில்லை.” என்றேன். இதன் காரணமாகத்தான் சிங்கிள் எடுக்கும் வாய்ப்பை நான் தட்டிக் கழித்துவிட்டேன். இறுதியில் நண்பர் விராட் கோலி சதம் அடித்ததில் எனக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் மகிழ்ச்சியாகவே இருக்கும் என்று நம்புகிறேன்.” என பேசினார்.