டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் அபார பந்துவீச்சால் வரிசையாக விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
கொல்கத்தா அணிக்கு இம்முறை ஜேசன் ராய் மற்றும் லிட்டன் தாஸ் இருவரும் ஓபனிங் செய்தனர். இருவரும் இந்த போட்டியில் தான் இந்த சீசனில் முதல்முறையாக விளையாடுகின்றனர். அதேபோல் டெல்லி அணிக்கு ஓபனிங் பவுலராக இஷாந்த் சர்மா எடுத்துவரப்பட்டார். இந்த சீசனில் அவரும் முதல் முறையாக விளையாடுகிறார்.
லிட்டன் தாஸ் முகேஷ் குமார் பந்தில் அடிக்க முயற்சித்தபோது, 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் சதம் அடித்து அசத்திய வெங்கடேஷ் ஐயர் இன்றைய போட்டியில் ஆண்ட்ரிக் நார்கியா பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக உள்ளே வந்த நித்திஷ் ரானா 4 ரன்களுக்கு இஷாந்த் சர்மா பந்தில் ஆட்டம் இழந்தார். மந்தீப் சிங்(12) மற்றும் ரிங்கு சிங்(6) இருவரின் விக்கெட்டையும் அக்சர் பட்டேல் எடுக்க, கொல்கத்தா அணி 60 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் இழந்து தடுமாற்றம் கண்டது. இருப்பினும் விக்கெட் சரிவு அத்துடன் நிற்கவில்லை.
ஆரம்பத்தில் இருந்தே நிதானமாக விளையாடி வந்த ஜேசன் ராய் 43 ரன்கள் அடித்திருந்தபோது குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டம் இழந்தார். பின்னர் 4 ரன்கள் அடித்திருந்த சுனில் நரேன் விக்கெட்டை எடுத்தார் இஷாந்த் ஷர்மா.
6 விக்கெட்டுகள் போனபிறகு உள்ளே வந்த ஆண்ட்ரெ ரசல் ஒரு பக்கம் நின்று கொண்டு கடைசி சில ஓவர்களில் ரன்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று காத்திருந்தார். ஆனால் மறுமுனையில் விக்கெட்டுகள் வரிசையாக சரிந்ததால் 96 ரன்களுக்கு 9 விக்கெடுகளை இழந்தது கொல்கத்தா அணி.
விக்கெட் விடக்கூடாது என பொறுமையாக ஆடிய ரசல், கடைசி ஓவரில் 3 சிக்ஸர்கள் அடித்து அணியின் ஸ்கோரை 120+ ஆக மாற்ற உதவினார். இவர் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 38 ரன்கள் அடித்திருந்தார். 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த கொல்கத்தா அணி 127 ரன்கள் மட்டுமே அடித்தது.
இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ், நார்க்கியா மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.