இரண்டு வருடங்கள் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த அஸ்வின், திடீரென டெல்லி அணிக்கு விற்க்கப்பட்டதற்கான காரணத்தை அவரே பகிரங்கமாக வெளியிட்டுள்ளார்.
சென்னை அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளராக இருந்த அஸ்வின், 2016, 2017 ஆம் ஆண்டு புனே அணிக்காக ஆடினார். அதன்பிறகு, 2018ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு ஏலம் எடுக்கப்பட்டு, கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
அவர் கேப்டனாக இருந்த 28 ஆட்டங்களில் பஞ்சாப் அணி 12-ல் வெற்றியும் 16-ல் தோல்வியும் சந்தித்துள்ளது. கடந்த வருடம் புள்ளிகள் பட்டியலில் 7-ம் இடமும் இந்த வருடம் 6-ம் இடமும் பிடித்தது. இரண்டு வருடங்களிலும் கடைசிக்கட்டத்தில் மோசமாக விளையாடியதால் பிளே-ஆப் சுற்றுக்கு அந்த அணியால் தகுதி பெற முடியாமல் போனது.
இந்நிலையில் பஞ்சாப் அணியிலிருந்து தில்லி கேபிடல்ஸ் அணிக்கு மாறியுள்ளார் அஸ்வின். 2018 ஐபிஎல் ஏலத்தில் அஸ்வினை ரூ. 7.60 கோடிக்குத் தேர்வு செய்தது பஞ்சாப் அணி. தற்போது, அதே தொகைக்கு அஸ்வின், தில்லி அணிக்குத் தேர்வாகியுள்ளார்.
இந்நிலையில் ஒரு பேட்டியில் அஸ்வின் கூறியதாவது:
“கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடனான என்னுடைய அனுபவம் சிறப்பாக இருந்தது. கேப்டன் பதவி கிடைத்ததால் புதிய பாதையில் பயணித்தேன். என்னால் முடிந்தவற்றை நான் அணிக்காக கொடுத்தேன்.
ஆனால், எதிர்பார்த்த வெற்றிகளை அணிக்குத் தரவில்லை என அணி உரிமையாளர்கள் கருதினார்கள். அது உண்மைதான். இரண்டு வருடங்களிலும் என்னால் அணியை பிளே-ஆப் தகுதி பெற வைக்க முடியவில்லை. அதைச் செய்ய முடியவில்லை என்ற எனது தவறை நான் துணிச்சலாக ஒப்புக்கொள்கிறேன்.
தோல்வியில் இருந்து பாடங்கள் நிறைய கற்றுக்கொண்டேன். புதிய அணியில் இதனை பயன்படுத்தி வெற்றியை காண காத்திருக்கிறேன்” என்றார்.