என்னவிட இந்த பையன் பெரிய ஆளா வருவான்… நானே உதவி செய்வேன்; பெருந்தன்மையுடன் பேசிய லசீத் மலிங்கா !!

என்னவிட இந்த பையன் பெரிய ஆளா வருவான்… நானே உதவி செய்வேன்; பெருந்தன்மையுடன் பேசிய லசீத் மலிங்கா

இளம் வீரரான மதீஷா பதிரானாவை தன்னை விட சிறந்த பந்துவீச்சாளராக உருவாக்குவதற்காக முயற்சித்து வருவதாக முன்னாள் கிரிக்கெட் வீரரான லசீத் மலிங்கா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை மொத்தம் 15 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடர், கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி துவங்கியது.

மொத்தம் 70 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் லீக் போட்டிகள் முடிவில் குஜராத், சென்னை, லக்னோ மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன. மற்ற அணிகள் ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறின.

கடந்த தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறிய தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை இரண்டாவது அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு, பந்துவீச்சில் மதீஷா பதிரானாவின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது.

தனது யார்கர் பந்துவீச்சால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து வரும் பதிரானாவை முன்னாள் வீரர்கள் பலரும் குட்டி மலிங்கா என்றே அழைத்து வருகின்றனர். அந்த அளவிற்கு யார்கரில் மிக சிறந்து விளங்கும் மதீஷா பதிரானாவை சிலர் மலிங்காவை விட சிறப்பான பந்துவீச்சாளராக இருப்பார் என்றும் பேசி வருகின்றனர்.

இந்தநிலையில், பதிரானா குறித்து பேசியுள்ள லசீத் மலிங்கா, தன்னைவிட பதிரானாவை சிறந்த பந்துவீச்சாளராக உருவாக்க முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து மலிங்கா பேசுகையில், “எப்படியாவது என்னைவிட சிறந்த வீரராக பதிரனாவை ஆக்கி விடவேண்டும் என நினைக்கிறேன். அடுத்த டெஸ்ட் டூரில் அவரை ஈடுபடுத்துங்கள், ஒருநாள் போட்டிகளிலும் ஆட வையுங்கள். அடுத்த மூன்று ஆண்டுகளில் எப்படி ஆடுகிறார் என்பதை வைத்து அவரது வருங்காலத்தைத் திட்டமிடுங்கள். அதற்குள் 10-15 டெஸ்ட் போட்டிகள் ஆடிவிட்டாலே அது அவரது முன்னேற்றத்திற்கு பெருமளவில் உதவும். நான் ரிவெர்ஸ் ஸ்விங் செய்யக் கற்றுக்கொண்டது டெஸ்ட் கிரிக்கெட்டில்தான். அப்படி என்னவெல்லாம் மதீஷா கற்றுக்கொள்வார் என்று யாராலும் சொல்ல முடியாது” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.