உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்து விட்டது. ஆனால் இந்தியாவின் தோல்வியைக் காட்டிலும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருவது தோனியின் ஓய்வுதான். கடந்த மூன்று நாட்களாக தோனி குறித்த ஹேஸ்டேக்ஸ் ட்விட்டரில் ட்ரெண்ட்டாகி வருகின்றன.
அத்துடன் தோனியைச் சுற்றி தற்போது அரசியல் பேச்சுகளும் வரத்தொடங்கிவிட்டன. ஓய்வுக்குப் பிறகு தோனி பாஜகவில் இணையப் போகிறார் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. பாஜகவைச் சேர்ந்த மத்திய முன்னாள் அமைச்சர் சஞ்சய் பஸ்வான் இது குறித்து இப்போது பேசியுள்ளார். பாஜகவில் தோனி இணைவார் என்றும் இது குறித்து பல நாட்களாக அவர் பேசி வருகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதற்கு முன் கிரிக்கெட்டில் இருந்து அரசியல் வாழ்க்கைக்கு தளம் மாறிய வீரர்கள் யார்? ஒரு சின்ன ரீவைண்ட் அடிக்கலாமா?
மன்சூர் அலிகான் பட்டோடி:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான பட்டோடி முதல் கிரிக்கெட் வீரராக அரசியலில் களமிறங்கினார். இவர் முதலில் ஹரியான மாநிலத்தின் பிவானி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அந்தத் தேர்தலில் இவர் தோற்றார். அதன்பின்னர் 1991ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தின் போபால் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டார். இதிலும் தோல்வியை தழுவிய பட்டோடி தனது அரசியல் வாழ்க்கைக்கு இறுதியாக ஒரு முற்றுப் புள்ளி வைத்தார். இதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால்? தமிழ்நாட்டில் மாபெரும் அரசியல் சக்தியாக வளம் வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பட்டோடியின் மிகத் தீவிரமான ரசிகர் என்பது பலர் அறியாதது.