நியூசிலாந்து டெஸ்ட் தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி, இந்திய அணிக்கு தேர்வானதும் எனது கனவு நனவானது என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் வளர்ந்து வரும் வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ளார் நவ்தீப் சைனி. 27 வயதாகும் சைனி கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக அறிமுகம் ஆனார். அதன்பின் தொடர்ந்து டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார்.
தற்போது நியூசிலாந்து தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் இந்திய அணிக்கு தேர்வானபோது கனவு நனவானது என்று நவ்தீப் சைனி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நவ்தீப் சைனி கூறுகையில் ‘‘எந்த நிலையை நான் அடைந்தேனோ, அதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். ஒவ்வொரு வீரருக்கும் இந்த கனவு இருக்கும். எனக்கும் அந்த கனவு இருந்தது. தற்போது அது நிறைவேறியுள்ளது. இதை முன்னோக்கி எடுத்துச் செல்ல விரும்புகிறேன்.
நான் இந்திய அணிக்காக தேர்வானபோது, என்னுடைய கனவு நனவானது. முதலில் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடினேன். அதன்பின் ரஞ்சி டிராபியில், தற்போது இந்திய அணியில் இடம் பிடித்துள்ளேன். இது எனது வாழ்க்கையின் மாற்றத்திற்கான நிலை’’ என்றார்.
விளையாட்டு உலகின் உயரிய அங்கீகாரங்களில் ஒன்றான லாரியஸ் விருதை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பெற்றுள்ளார்.
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் லாரியஸ் விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, 2019-ஆம் ஆண்டில் சிறந்து விளங்கியவர்களுக்கான விருது வழங்கும் விழா, ஜெர்மனி தலைநகர் பெர்லினில் கோலாகலமாக நடைபெற்றது. இதில், சிறந்த வீரருக்கான விருது, ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் ஆறு முறை சாம்பியனான லீவிஸ் ஹேமில்டனுக்கும், நட்சத்திர கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸிக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இதன்மூலம், லாரியஸ் விருதை வென்ற முதல் கால்பந்து வீரர் என்ற சாதனைக்கு மெஸ்ஸி சொந்தக்காரர் ஆனார்.
சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான விருதை, அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் ஜாம்பவானும், உலக சாம்பியன்ஷிப் தொடரில் அதிக பதக்கங்களை வென்றவருமான சிமோன் பைல்ஸ் தட்டிச் சென்றார்.
கடந்தாண்டு நடைபெற்ற ஆடவருக்கான ரக்பி உலகக்கோப்பையை வென்ற தென்னாப்பிரிக்கா, சிறந்த அணிக்கான விருதை வசப்படுத்தியது. லாரியஸ் வாழ்நாள் சாதனையாளர் விருதை, ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த கூடைப்பந்து ஜாம்பவான் டிர்க் நோவிட்ஸ்கி தமதாக்கினார். கடந்த 20 ஆண்டு காலத்தில், 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக்கோப்பையை சச்சின் டெண்டுல்கர் கைப்பற்றியது, சிறந்த விளையாட்டு தருணமாக அங்கீகரிக்கப்பட்டு அவருக்கு விருது அளிக்கப்பட்டது.