முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் கிரிக்கெட் தொடர்பான எந்த வேலையும் இல்லாமல் தற்போது தேவையில்லாத காரியம் ஒன்றை செய்துள்ளார்.
அதாவது தற்போது வரை கிரிக்கெட் விளையாடிய வீரர்களில் வழுக்கை உள்ள வீரர்களை மட்டும் வைத்து சிறந்த டெஸ்ட் அணியை ஒன்றை உருவாக்கியுள்ளார். இது உண்மையில் அவருக்கு தேவையில்லாத வேலை என்று தான் தெரிகிறது. ஏனெனில் அவரே வழுக்கையாக தான் இருப்பார்.
கிரிக்கெட் போட்டிகள் நடக்காத நிலையில், வர்ணனை செய்யவும், விவாதம் செய்யவும் “கன்டன்ட்” கிடைக்காமல் அவதிப்படு வருகிறார்கள் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள். அதில் மைக்கேல் வாகன் விசித்திரமான ஒரு வேலையை செய்து கவனம் ஈர்த்துள்ளார்.
உலகிலேயே சிறந்த டெஸ்ட் அணி என பலரும் பல வீரர்களை வைத்து தங்கள் அணியை அறிவித்து முடித்த நிலையில், வழுக்கை வீரர்கள் அணியை அறிவித்துள்ளார் மைக்கேல் வாகன். இதில் இடம் பெற்றுள்ள வீரர்கள் அனைவரும் வழுக்கைத் தலை கொண்ட கிரிக்கெட் வீரர்களே.
இந்த வழுக்கை அணியின் துவக்க வீரர்கள் இங்கிலாந்து முன்னாள் வீரர் கிரஹாம் கூச் மற்றும் முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஹெர்ஷல் கிப்ஸ். இருவருமே தங்கள் அணிகளுக்காக சிறப்பாக ஆடியவர்கள். கிப்ஸ் தென்னாப்பிரிக்க அணிக்காக 90 டெஸ்ட் போட்டிகள் ஆடியவர்.
மூன்றாம் இடத்தில் மற்றொரு தென்னாப்பிரிக்க வீரர் ஹஷிம் ஆம்லா இடம் பெற்றுள்ளார். இவர் வழுக்கைத் தலையுடன், நீண்ட தாடியுடன் காட்சி அளிப்பார். இவர் 2019இல் தான் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. நான்காம் வரிசையில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரரும், பயிற்சியாளருமான டேரன் லேஹ்மன் இடம் பெற்றுள்ளார்.
மற்றொரு முன்னாள் இங்கிலாந்து வீரர் ஜோனாதன் ட்ராட் ஐந்தாம் இடத்தில் பேட்டிங் செய்ய தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரையன் கிளோஸ் ஆறாம் இடத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரையே கேப்டனாகவும் தேர்வு செய்துள்ளார் மைக்கேல் வாகன்.
யார் இந்த பிரையன் கிளோஸ்? இவர் 1949இல் இங்கிலாந்து அணிக்காக ஆடியவர். இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டியில் ஆடிய மிக இளம் வீரர் இவரே. இவரை பற்றி இப்போதுள்ள ரசிகர்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை. இவரை எப்படியோ ஞாபகம் வைத்து தன் அணியில் இடம் பெற செய்துள்ளார் வாகன்.
விக்கெட் கீப்பராக மாட் ப்ரியாரை தேர்வு செய்துள்ளார். இவரும் இங்கிலாந்து வீரரே. பந்துவீச்சில் ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் டோக் போலிங்கர் மற்றும் சுழற் பந்துவீச்சாளர் நாதன் லியோனை தேர்வு செய்துள்ளார். மற்றொரு வேகப் பந்துவீச்சாளராக பாகிஸ்தான் அணியின் ராணா நவேத் அல் ஹுசைனை தேர்வு செய்துள்ளார்.
11ஆம் இடத்தில் ஜாக் லீச் அல்லது கிறிஸ் மார்ட்டின் இருவரையும் அறிவித்துள்ளார் மைக்கேல் வாகன். இதில் ஒரு இந்திய வீரர் கூட இடம் பெறவில்லை. சிலர் வீரேந்தர் சேவாக்கை சேர்த்திருக்க வேண்டும் என கூறி வருந்தி உள்ளனர்.
இந்த உலகிலேயே சிறந்த வழுக்கைத் தலை டெஸ்ட் அணியில் இருந்து ஒரு விஷயம் தெளிவாக தெரிகிறது. இங்கிலாந்து வீரர்கள் பலருக்கு வழுக்கைத் தலை என்பது தான் அந்த விஷயம். அதனால் தானோ என்னவோ, முன்னாள் இங்கிலாந்து கேப்டனுக்கு இப்படி ஒரு அணியை அறிவிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது.