இந்திய அணி எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது எந்த சூழ்நிலைக்கும் ஏற்றவாறு பந்து வீசும் திறமையை பெற்றுள்ளது என மைக் ஹெசன் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து – இந்தியா இடையில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை இந்தியா 5-0 எனக் கைப்பற்றியது. முதல் இரண்டு போட்டிகளில் எளிதாக வெற்றி பெற்ற இந்தியா, அடுத்த இரண்டு போட்டிகளிலும் சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்தியாவின் பந்து வீச்சு எப்போதும் இல்லாத வகையில் உலகின் எந்தவொரு சூழ்நிலைக்கும் ஏற்ப சிறப்பாக உள்ளது என நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மைக் ஹெசன் கூறுகையில் ‘‘இந்திய அணி தற்போது மிகமிக சிறந்த அணியாக திகழ்கிறது. அவர்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறார்கள். உலகின் எந்தவொரு சூழ்நிலைகளுக்கும் (Conditions) ஒத்துப்போகும் வகையில் அவர்களது பந்து வீச்சு இருக்கிறது. ஏனென்றால், அவர்களின் வேகப்பந்து வீச்சு யுனிட், சுழற்பந்து வீச்சு யுனிட் சிறப்பாக உள்ளது. இதுபோன்று இந்திய அணி இதற்கு முன்பு இருந்ததில்லை.
வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடித்து விளையாடும் திறன் இந்திய அணி பேட்ஸ்மேன்களுக்கு உள்ளது. ஆகவே இது மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணி. இந்த தொடர் உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாட இந்திய அணிக்கு உதவியாக இருக்கும்’’என்றார்.