டி -20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து மிதாலி ராஜ் ஒய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் மிதாலி ராஜ் (வயது 36), கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கருக்கு நிகராக போற்றப்படுகிறார். 1999ஆம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமான மிதாலி ராஜ் தன் அறிமுகப் போட்டியிலேயே சதமடித்து (114* ரன்கள்) இந்தியாவை வெற்றிபெறச் செய்தார்.
இந்திய மகளிர் கிரிக்கெட்டை உலக அரங்கில் பிரபலமடையச் செய்ததில் மிதாலி ராஜ் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
கடந்த 2006 -ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக தனது முதல் சர்வதேச டி -20 கிரிக்கெட் போட்டியில் களமிறங்கினர் மிதாலி. 89 சர்வதேச டி -20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவுள்ள மிதாலி ராஜ் 17 அரை சதங்கள் உதவியுடன் 2364 ரன்கள் அடித்துள்ளார்.சராசரி 37.52 ஆகும்.
இந்த நிலையில் டி -20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து மிதாலி ராஜ் ஒய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்த ஓய்வு குறித்து பேசியுள்ள மிதாலிராஜ்…
2006-ம் ஆண்டிலிருந்து இந்திய அணியின் டி20 அணிக்காக ஆடி வருகிறேன். டி20 தொடரில் இருந்து நான் ஓய்வு பெற விரும்புகிறேன். 2021 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வருகிறது. அதற்கு தயாராகும் வகையில் என்னை தயார் படுத்திக் கொண்டிருக்கிறேன். இதற்காக மற்ற போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று எனது ஆற்றல் முழுவதையும் அந்த ஒரு உலகக் கோப்பை தொடருக்கான தயார் செய்து வருகிறேன்.
2021 ஆம் ஆண்டு நடைபெறும் உலக கோப்பை தொடரில் நன்றாக ஆடி கோப்பை வென்று கொடுப்பதே எனது இறுதி இலட்சியம். இதுநாள் வரை எனக்கு உதவியாக இருந்த பிசிசிஐ நிர்வாகத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தென்னாப்பிரிக்க தொடருக்கு தயாராகிவரும் இந்திய மகளிர் அணிக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் மிதாலி ராஜ்.