நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியில் கேன் வில்லியம்சனை சமாளிக்க தேவையான அனைத்து திட்டங்களும் தன்னிடம் உள்ளதாக இந்திய வீரர் முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் வரும் 18ம் தேதி டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டி துவங்க உள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் அடுத்த சில தினங்களில் நியூசிலாந்திற்கு செல்ல உள்ளனர். கிட்டத்தட்ட டி.20 மற்றும் ஒருநாள் உலகக்கோப்பைக்கு இணையாக பார்க்கப்படும் இந்த இறுதி போட்டிக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.
ரசிகர்களை போன்றே மிகுந்த ஆவலுடன் காத்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் இந்த இறுதி போட்டி குறித்தான தங்களது கருத்துக்களை ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர். அதே போல் இந்த போட்டியில் எந்த அணி வெல்லும் என்பது குறித்தும் தங்களது கணிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த போட்டி குறித்து நியூசிலாந்து அணியின் முக்கிய வீரரான டிரண்ட் பவுல்ட் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், இந்திய கேப்டன் விராட் கோலியை எச்சரிக்கும் வகையில் பேசியிருந்த நிலையில், தற்போது இந்திய வீரரான முகமது சிராஜ், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து முகமது சிராஜ் பேசுகையில், “நியூசிலாந்து அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன் மிக சிறந்த வீரர் என்பதிலும், அவரது விக்கெட்டை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல என்பதும் எனக்கு நன்றாக தெரியும், இருந்த போதிலும் கேன் வில்லியம்சனின் விக்கெட்டை வீழ்த்த தேவையான அனைத்து திட்டங்களும் என்னிடம் உள்ளன. கேன் வில்லியம்சன் பொறுமை இழக்கும் அளவிற்கு ஒரே திசையில் தொடர்ச்சியாக பந்துவீச முயற்சிப்பேன். வேறு வழியே இல்லாமல் கேன் வில்லியம்சன் அடித்து ஆட துவங்கும் போது நிச்சயம் விக்கெட்டை இழப்பார்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய முகமது சிராஜ், “டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடன் நியூசிலாந்து அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது நிச்சயம் அந்த அணிக்கு பயனுள்ளதாக இருக்கும். இங்கிலாந்து ஆடுகளங்களை நியூசிலாந்து வீரர்கள் புரிந்து கொள்வதற்கு இந்த தொடர் அவர்களுக்கு பயன்படும்” என்று தெரிவித்துள்ளார்.
எனக்கான இடத்தை உறுதி செய்வேன்;
இந்திய அணியுடனான தனது பயணம் குறித்து சிராஜ் பேசுகையில், “எனது பந்துவீச்சில் அதிக முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளேன். இதற்காக நான் அதிகம் கஷ்டப்பட்டுள்ளேன். கடந்த 2019ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மோசமாக செயல்பட்டதற்கு பிறகு நான் பட்ட கஷ்டங்கள் ஏராளம், அதன் பிறகே எனது பந்துவீச்சில் அதிகமான முன்னேற்றங்களை ஏற்படுத்தினேன். விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக இருப்பது தனிப்பட்ட முறையில் எனக்கு மிகப்பெரும் பலம். என்னை எப்படி கையாளுவது என்பது விராட் கோலிக்கு நன்றாக தெரியும். பல இக்கட்டான நேரங்களில் விராட் கோலி மட்டுமே என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கினார். இந்திய அணியில் எனக்கான இடத்தை உறுதி செய்து கொண்டு, நீண்ட காலம் இந்திய அணிக்காக விளையாட விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.