உலகக்கோப்பையை எந்த ஒரு இங்கிலாந்து கேப்டனும் வென்றதில்லை, அதுவும் 2015 உலகக்கோப்பையின் கீழ்நிலைக்குப் பிறகு அணியை உருவாக்கி, உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்த இயான் மோர்கன் தன் எதிர்காலத்தை முடிவு செய்யும் உரிமை அவருக்கு மட்டுமே உண்டு என்று ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் தெரிவித்திருப்பது, இயன் மோர்கன் ஒருவேளை இத்துடன் கேப்டன் பொறுப்புக்கு முழுக்கு போடலாம் என்று யோசித்திருக்கிறாரோ என்ற ஐயத்தை இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரங்களில் ஏற்பட்டுள்ளது.
2023 உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறுகிறது, அதுவரை மோர்கன் நீடிப்பது கடினம் என்று உணரப்படுகிறது. அப்போது அவருக்கு வயது 36 ஆகியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அடுத்த ஆண்டு ஆஸி.யில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையில் மோர்கன் தன இங்கிலாந்து அணியை வழிநடத்துகிறார்.
இது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட்டின் இயக்குநர் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் கூறும்போது, “அவர் என்ன சாதிக்க நினைக்கிறார் என்பதைப் பொறுத்து அவரது எதிர்காலம் அமையும், இப்போது அவர் எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டு விட்டார். நாம் முன்பு ஆஷஸ் தொடர் வென்றிருக்கிறோம், நம்பர் 1 ஆக இருந்திருக்கிறோம் ஆனால் அதுவே முடிவும் முதலும் என்று நினைத்து விட்டோம்.
இப்போதைக்கு அவர் அணியை வழிநடத்திய விதம் அபாரமாக இருந்தது, பாராட்டுக்குரியதாக உள்ளது. கேப்டனாக அவர் நீடிப்பது என்பது இதுவரை செய்தது போல் அணிக்கு வீரர்களின் உத்வேக சக்தியாக உந்து சக்தியாக அவர் தொடர்ந்து இருக்க முடியும் என்றால் அவர் தொடர்வதில் எந்த வித சந்தேகமும் இல்லை. ஆனால் ஒரு அற்புதமான தலைவராக அவர் இருந்து வருகிறார் என்பதில் இருவேறு கருத்துக்கள் இல்லை” என்றார்.
அடுத்த கேப்டனாக கருதப்படும் ஜோஸ் பட்லர் கூறும்போது, “ஏன் மோர்கன் பற்றி இந்தக் கேள்வி எழுகிறது, இன்னும் அவரிடம் ஏகப்பட்ட விஷயங்கள் அணிக்காக காத்திருக்கின்றன. அவர் தொடர்ந்து நீடிப்பார் என்றே நான் நம்புகிறேன். அவர் செய்தது நம்ப முடியாத ஒரு காரியம், எங்களுக்கு கிடைத்த கேப்டன்களிலேயே சிறந்தவர் அவர்தான்.
இந்த விவாதங்கள் மோர்கன் ஒருவேளை கேப்டன் பதவியை துறந்து விடுவாரோ என்ற ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது.