இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் டோனியின் அகாடமியுடன் சிங்கப்பூர் பெண்கள் அணி கேப்டன் ஜி.கே. திவிகா கைக்கோர்த்துள்ளார்.
இவர் உலகம் முழுவதும் கிரிக்கெட் அகாடமியை தொடங்க திட்டமிட்டுள்ளார். சிறுவர்கள் படிப்புடன் விளையாட்டிலும் ஆர்வம் காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார். முதன்முதலாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் துபாயில் தனது முதல் அகாடமியை தொடங்கினார் டோனி.
இதனைத் தொடர்ந்து 2-வதாக கடந்த 20-ந்தேதி சிங்கப்பூரில் உள்ள செயின்ட் பேட்ரிக் பள்ளியில் அகாடமியை தொடங்கியுள்ளார். இந்த அகாடமியை சிங்கப்பூர் பெண்கள் அணியின் கேப்டன் ஜி.கே. திவ்யா நிர்வகிக்க உள்ளார்.
இந்த அகாடமியின் எதிர்காலம் குறித்து டோனியிடம் உரையாடியது குறித்து ஜி.கே. திவியா கூறுகையில், ‘‘நாங்கள் டோனியுடன் கலந்துரையாடும்போது, டோனியின் முழு கவனமும் சிறுவர்களின் முழுமையான வளர்ச்சியின் மீதுதான் இருந்தது. சிறுவர்கள் குறிப்பிட்ட வயதை எட்டும்போது படிப்பு மற்றும் விளையாட்டிற்கு இது முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இருக்கும்.
அகாடமியின் முக்கிய நோக்கமே ஆட்டத்தின் நுணுக்கத்தை வளர்த்துக் கொள்வது, தலைமைக்குரிய பண்பு, எந்த சூழ்நிலையையும் சமாளித்து வெற்றி பெறுவதற்கான திறமையை வளர்த்துக் கொள்ளுதல் என்பதுதான்’’ என்றார்.
மேலும், தற்போதைய நாளில் கிரிக்கெட் விளையாடுவதற்கு வயது, பாலினம் மற்றும் சில காரணிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. திறமை, நோக்கம், முயற்சி, ஆர்வம் ஆகியவைதான் முக்கியமானது.
திவ்யாவின் தாத்தா திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அகாடமியில் 6 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்கள் மட்டுமே சேரமுடியும். ஏற்கனவே 200-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பதிவு செய்துள்ளனர்.