கவலையே வேணாம்… தல தோனி அடுத்த வருசமும் விளையாடுவாரு; அதிரடியான அறிவிப்பை வெளியிட்ட காசி விஸ்வநாதன்
தோனி அடுத்த ஐபிஎல் தொடரிலும் விளையாட வேண்டும் என விரும்புவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாக இயக்குநரான காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சமகால கிரிக்கெட்டில் அதிகமான ரசிகர்களை கொண்ட கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் யாருமே எட்ட முடியாத அளவிலான இடத்தில் இருக்கும் தோனி, தனது கிரிக்கெட் கேரியரில் திருப்புமுனையை ஏற்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சொந்த மண்ணான சென்னையில் தான், தான் விளையாடும் கடைசி போட்டியும் இருக்க வேண்டும் என விரும்புவதாக கடந்த வருடம் அறிவித்திருந்தார்.
தோனியின் ஆசைக்கு ஏற்றார் போலவே நடப்பு ஐபிஎல் தொடருக்கான இரண்டாவது குவாலிபயர் மற்றும் இறுதி போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருந்தது. ஆனால் பெங்களூரில் நடைபெற்ற பெங்களூர் அணிக்கு எதிரான தனது கடைசி லீக் போட்டியில் தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதன் மூலம் ப்ளே ஆஃப் வாய்ப்பையும் இழந்து வெளியேறியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறியதால், தோனி விரும்பியது நடக்கமாலே போய்விடுமா.? இல்லை அடுத்த தொடரிலும் தோனி விளையாடுவாரா..? என்ற குழுப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்கள் தோனி அடுத்த வருடமும் விளையாட வேண்டும், உரிய மரியாதையுடன் தோனி கிரிக்கெட்டில் இருந்து விடைபெற வேண்டும் என விரும்பிவரும் நிலையில், தோனி அடுத்த தொடரிலும் விளையாடுவார் என்ற நம்பிக்கை தங்களுக்கு அதிகம் இருப்பதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாக இயக்குநரான காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து காசி விஸ்வநாதன் பேசுகையில், “தோனி அடுத்த தொடரில் விளையாடுவாரா இல்லையா..? இல்லை அடுத்த சில தினங்களில் திடீரென ஓய்வை அறிவிப்பாரா என்பது குறித்து தெரிந்த ஒரே ஒரு நபர் தோனி மட்டும் தான். நாங்கள் எப்போதுமே தோனியின் முடிவை மதிப்போம். அவராக ஒரு முடிவை எடுத்து சொன்னால் எங்களுக்கும் தெரியும். ஆனால் தோனி அடுத்த தொடரிலும் விளையாட வேண்டும் என்பதே எனது விருப்பம். அவர் அடுத்த தொடரிலும் விளையாடுவார் என நான் அதிகமாக நம்புகிறேன். ரசிகர்களை போலவே அவர் அடுத்த தொடரிலும் விளையாட வேண்டும் என்பதே எனது ஆசையும்” என்று தெரிவித்தார்.