சென்னை சூப்பர் கிங்ஸ் தோற்றதற்கு காரணம் இதுதான்: சச்சின் டெண்டுல்கர் ஓப்பன் டாக்!

2019-ஆம் ஆண்டு 12-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடரின் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. மிகவும் பரபரப்புடன் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கடைசி பந்தில் 1 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்று 4-ஆவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.

இதுகுறித்து மும்பை இந்தியன்ஸ் தூதர் சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது:

இந்த ஆட்டத்தை லசித் மலிங்கா மிகவும் சிறப்புடன் முடித்து வைத்தார். ஒரு முனையில் க்ருணால் பாண்டியா ரன்களை வாரி வழங்கினாலும், மறுமுனையில் ஜஸ்ப்ரீத் பும்ரா சிறப்பாக பந்துவீசி எதிரணியை கட்டுப்படுத்தினார். பும்ராவின் பந்துவீச்சு மிகவும் சிறப்பானதாக அமைந்தது.

நாங்கள் கடைசியாக ஆடிய இரண்டு இறுதி ஆட்டங்களும் மிகவும் சிறப்பானதாக அமைந்தது. குறிப்பாக குறைந்தபட்ச வெற்றி இலக்கை நிர்ணயித்தாலும், எதிரணியை திறம்பட கட்டுப்படுத்தியுள்ளோம். மும்பை அணியில் அனுபவ மற்றும் இளம் வீரர்கள் சரிவர அமைந்துள்ளது எங்களுக்கு கூடுதல் பலமாக உள்ளது.

சுழற்பந்துவீச்சாளர்கள் நன்கு பந்துவீசினர், ஹார்த்திக் பாண்டியாவின் ஆட்டமும் நல்ல முறையில் அமைந்திருந்தது. 6-ஆவது ஓவரில் இருந்து 15-ஆவது ஓவர் வரையிலான காலகட்டம் தான் இந்த ஆட்டத்தில் மிகவும் முக்கியமானதாக இருந்தது.

அதிலும் தோனியின் ரன்-அவுட் தான் ஆட்ட்தின் போக்கையே மாற்றியது என்று தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல், 4 முறை இவ்விரு அணிகளும் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தியிருந்தாலும், 2010-ஆம் ஆண்டு மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றது. 2013, 2015, 2019 ஆகிய 3 முறை மும்பை இந்தியன்ஸ் அணி தான் வெற்றிபெற்றுள்ளது.

இந்நிலையில், இந்த 4 இறுதி ஆட்டங்களின் போதும் ஒரு ஒற்றுமை மட்டும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. அது, இறுதிப்போட்டியில் முதல் பேட்டிங் செய்யும் அணியே வெற்றிபெற்றதாகும்.

2010-ஆம் ஆண்டு டாஸ் வென்று முதல் பேட்டிங் தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ், 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையை கைப்பற்றியது.

2013-ஆம் ஆண்டு டாஸ் வென்று முதல் பேட்டிங் தேர்வு செய்த மும்பை இந்தியன்ஸ், 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையை கைப்பற்றியது.

2015-ஆம் ஆண்டு டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி கோப்பையை நழுவவிட்டது.

2019-ஆம் ஆண்டு டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த மும்பை இந்தியன்ஸ், 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று மீண்டும் கோப்பையை கைப்பற்றியது.

Sathish Kumar:

This website uses cookies.