என் வாழ்க்கையில் ரசிகர்கள் அளித்த வரவேற்பில் இரு விஷயங்களை என்னால் மறக்கவே முடியாது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
மும்பையில் இன்று தனியார் நிறுவனம் சார்பில் கைக்கடிகாரம் அறிமுக விழா நடந்தது. இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 2 மாடல் கைக்கடிகாரங்களை அறிமுகம் செய்தார்.
அப்போது தனது தலைமையில் 2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை, 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற தருணத்தை அவர் நினைவுகூர்ந்து மிகவும் உருக்கமாகப் பேசினார். அதிலும் கோப்பையை வென்று மும்பைக்கு வந்தபோது ரசிகர்கள் அளித்த வரவேற்பையும், அன்பையும், 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் ரசிகர்களின் செயலையும் தோனி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் தோனி பேசியதாவது:
”என் கிரிக்கெட் வாழ்க்கையில் இரு நிகழ்வுகளை என்னால் மறக்க முடியாது. கடந்த 2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டியில் கோப்பையை வென்று நாங்கள் நாடு திரும்பினோம். அப்போது திறந்தவெளிப் பேருந்தில் மும்பை நகரைச் சுற்றி வந்தோம். அப்போது அனைத்து மக்களும் எங்களைச் சூழ்ந்துகொண்டு வாழ்த்தியதையும், பாராட்டியதையும் என்னால் மறக்க முடியாது.
அனைத்து ரசிகர்கள், மக்கள் முகத்திலும் புன்னகையைக் கண்டேன். மும்பை கடற்கரைப் பகுதியில் நாங்கள் வந்தபோது ஏராளமான கூட்டம், போக்குவரத்து முடங்கியது. ஏராளமானோர் பணிக்குச் செல்பவர்கள், விமானம், ரயில் நிலையம் செல்பவர்கள் அனைவரும் அந்தப் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டார்கள். ஆனால் ஒருவர் கூட வருத்தப்படாமல் அனைவரின் முகத்திலும் புன்னகைதான் இருந்தது.
இரண்டாவது சம்பவம் 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் நாங்கள் விளையாடிக் கொண்டிருந்தோம். கடைசி நேரத்தில் வெற்றிக்கு 15 முதல் 20 ரன்கள் தேவைப்பட்டது. மும்பை வான்ஹடே அரங்கில் அமர்ந்திருந்த அனைத்து ரசிகர்களும் வந்தே மாதரம் பாடலை ஒட்டுமொத்தமாகப் பாடத் தொடங்கினார்கள். அந்த வினாடி என் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்த இரு நிகழ்வுகளைப்போல் மீண்டும் நிகழுமா என்பது கடினம். என் மனதில் இந்த இரு சம்பவங்களும் நீங்காமல் இருக்கின்றன.