நானே பெரிய தோனி ரசிகன், அப்பறம் தான் இது எல்லாம்; எம்.எஸ்.கே பிரசாத் அதிரடி பேச்சு
நான் தோனியின் மிகப்பெரிய ரசிகன். இருந்தபோதிலும், அணியின் வளர்ச்சிக்காக தோனி மட்டுமல்லாமல், இளைஞர்களுக்குத்தான் அதிகமான வாய்ப்பு வழங்குவதுதான் எனது கடமை என்று இந்திய அணி தேர்வுக்குழுவின் முன்னாள் தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.
தேர்வுக் குழுவின் தலைவராக இருந்த எம்.எஸ்.கே.பிரசாத் ஓய்வு பெற்ற நிலையில் ‘தி ஸ்போர்ட்ஸ்டார்’ இதழுக்குப் பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
”எங்களைப் பொறுத்தவரை நாங்கள் இளைஞர்களுக்குத்தான் அதிகமான வாய்ப்புகளை வழங்குகிறோம். அவர்கள் நன்றாக செட்டில் ஆகி நீண்ட காலத்தில் விளையாட நினைக்கிறோம்.
மகேந்திர சிங் தோனி அவருடைய முடிவை அவர் எடுப்பார். தேர்வுக்குழுத் தலைவராக இருந்த வரை என் பணி தவிர்த்துப் பார்த்தால், நான் தோனியின் மிகப்பெரிய ரசிகன். அவரின் தலைமையில் இந்திய அணி 2 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை, டெஸ்ட் தர வரிசையில் முதலிடம் என சாதித்துள்ளது. ஆதலால் தோனியின் தலைமையை யாரும் கேள்வி கேட்க முடியாது.
ஆனால், அவரின் கிரிக்கெட் வாழ்க்கையைப் பொறுத்தவரை தோனிதான் முடிவெடுக்கவேண்டும். தேர்வுக் குழுத் தலைவராக, தோனிக்கு அடுத்து, அடுத்த தலைமுறை வீரர்களை அடையாளம் கண்டு வாய்ப்புகளை வழங்கிட வேண்டும்.
என்னுடைய காலத்தில் ரோஹித் சர்மா நல்ல வீரராக உருமாறினார். அணியில் தனக்கென நல்ல இடத்தை தக்கவைத்தார். அவரின் மாற்றத்தை, முன்னேற்றத்தை நாம் உணருவது கடினம்தான், வியப்புக்குரியதுதான்.
டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராகவும் விளையாட முடியும் என்பதை ரோஹித் சர்மா நிரூபித்துள்ளார். அவருக்கு வெளிநாடுகளிலும் இதேபோன்ற பேட்டிங் சூழல் அமைந்தது” என்றார்.