சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடக்க வீரராக நியூசிலாந்தின் அதிரடி வீரர் !
சென்ற ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடுமையாக சொதப்பியதன் காரணமாக எப்போதும் இல்லாத வகையில் பிளே ஆப் சுற்றுக்கு கூட செல்லாமல் தொடரிலிருந்து பாதியில் நடையை கட்டியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்நிலையில் அடுத்த வருடம் மிகப்பெரிய ஐபிஎல் தொடர் நடக்கப்போகிறது.
இதற்காக ஒவ்வொரு அணியும் தங்களது வீரர்களை தற்போதிலிருந்து தேர்வு செய்யத் துவங்கிவிட்டார்கள். இதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் ஒவ்வொரு வீரராக சல்லடை போட்டு தேடத் தொடங்கிவிட்டார். நியூஸிலாந்தின் புதுமுக அதிரடி தொடக்க வீரரான டிம் செய்ஃபர்ட்டைக் கொண்டு வர சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பரிசீலித்து வருகிறார்.
பாகிஸ்தானுக்கு எதிராக சமீபத்தில் முடிந்த டி20 தொடரில் டிம் செய்ஃபர்ட்டைக் தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டது கவனிக்கத்தக்கது. பிரெண்டன் மெக்கல்லமின் அதிரடி வகையறாவுடன் செய்ஃபர்ட்டின் ஆட்டம் ஒப்பிடப்பட்டு வருகிறது, மேலும் இவர் பிரெண்டன் மெக்கல்லம் கைவண்ணத்தில் பயிற்சி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த டி20 தொடரில் வர்ணனை செய்து கொண்டிருந்த பிளெமிங், செய்ஃபர்ட்டைக் குறிப்பிட்டு, “மஞ்சள் சீருடையில் ஓர் அணி உள்ளது. அது உங்களை (செய்ஃபர்ட்) எதிர்நோக்குகிறது, பிரெண்டன் மெக்கல்லம் அணி மட்டுமல்ல, மற்ற அணிகளும் உள்ளன” என்று மஞ்சள் சீருடை சிஎஸ்கே அணிக்கு அவரை எடுப்பது போல் தெரிவித்தார்.
செய்ஃபர்ட்டின் ஸ்ட்ரைக் ரேட் 139.68 என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் 2021 பொறுத்தவரை 8 அணிகளுடனேயே நடைபெறும் என்பதால் இந்தத் தொடருக்கான மினி வீரர்கள் ஏலம் நடைபெறும்போது செய்ஃபர்ட்டை சிஎஸ்கே வாங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.