உலகக் கோப்பை முடிந்து நியூசிலாந்து அணி நாடு திரும்பும் நிகழ்வு சில சிக்கல்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிறன்று கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் அதிக பவுண்டரிகள் கொண்ட விதிப்படி தோற்றது.
இரு அணிகளும் 100 ஓவர்கள் விளையாடிய பிறகும் வெற்றியாளரை முடிவு செய்ய முடியவில்லை. பின்னர் சூப்பர் ஓவர் ஆடப்பட்டத்து. அதிலும் டை ஆனதால், பவுண்டரி எண்ணிக்கை வைத்து இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
நியூசிலாந்து தலைமை நிர்வாகி கூறுகையில், “வீரர்கள் அனைவருக்கும் மரியாதை தெரிவிக்கும் விதமாக ஒரு நிகழ்ச்சி நடத்தவுள்ளோம். இங்கிலாந்துக்கு சென்ற எல்லா வீரர்களும் ஒன்றாக நாடு திரும்பவில்லை. சிலர் விடுமுறையை கொண்டாடவுள்ளனர்” என்று தெரிவித்தார்.
“இந்த சமயத்தில், சில வீரர்கள் வெவ்வேறு நேரத்தில் வரவுள்ளனர், சிலர் இப்போதைக்கு வருவதாக இல்லை, இன்னும் சிலர் விளையாட வேண்டிய சூழலில் உள்ளனர், எனவே இது சாத்தியம் இல்லை.”
“இதை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருப்பதால், வரும் வாரங்களில் எடுத்து நடத்த முயற்சி செய்யலாம்” என்றார்.
அதிக பவுண்டரி அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் துரதிஷ்டவசமாக உலகக்கோப்பை வெல்லும் வெல்லும் வாய்ப்பை நியூசிலாந்து இழந்தது.
இந்நிலையில், நியூசிலாந்து வீரர் ஜிம்மி நீசம் தோல்வியின் விரக்தியில், “ குழந்தைகளே…! இனிமேல் விளையாடாதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள பதிவில், “ குழந்தைகளே…! இனிமேல் விளையாடாதீர்கள். பேக்கிங் அல்லது வேறு ஏதேனும் எடுத்துக்கொள்ளுங்கள் மகிழ்ச்சியாக வாழுங்கள், 60 வயதில் இறந்து விடுங்கள்” என தெரிவித்துள்ளார்.
மேலும், நியூசிலாந்து அணியின் தோல்விக்கு நடுவரின் தவறான முடிவே காரணம் என நடுவர் சைமன் டஃபல் அதிர்ச்சி கருத்தை தெரிவித்துள்ளார்
5 ரன்களுக்கு பதிலாக 6 ரன்கள் வழங்க நடுவர்கள் முடிவு செய்தது பிழை என்று நடுவர் சைமன் டஃபெல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது, ” அந்தப் பரப்பான கட்டத்தில் ஃபீல்டர் பந்தை எறிய முயன்றபோது பேட்ஸ்மேன்கள் ஒருவருக்கொருவர் கிராஸ் செய்திருப்பார்கள் என்று நடுவர் நினைத்திருப்பார்.
ஆனால் டிவி ரீப்ளேவில் ஒருவருக்கொருவர் கிராஸ் செய்யவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் பேட்ஸ்மேன்கள் கிராஸ் செய்யாததால் அடுத்தப் பந்தை ஸ்டோக்ஸ் எதிர்கொண்டிருக்கக்கூடாது. அதில் ரஷித் தான் அடுத்த பந்தை எதிர்கொண்டிருக்கவேண்டும்.” என்றார்
“எனினும் இந்தத் தவறால் தான் நியூஸிலாந்து தோற்றது, இங்கிலாந்து வென்றது எனக் கூற முடியாது” என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.