இவ்வளவு கஷ்டப்பட்டும் வேஸ்ட் ஆகிடுச்சே… வேதனையை வெளிப்படுத்திய ஸ்ரேயஸ் ஐயர் !!

சிறப்பாக விளையாடிய போதும் முதல் போட்டியில் வெற்றி பெறாமல் போனது வருத்தமளிப்பதாக ஸ்ரேயாஸ் அய்யர் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஸ்ரேயாஸ் அய்யர் முதல் இன்னிங்சில் 105 ரன்கள் அடித்து மகத்தான சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். இதன்மூலம் அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய வெகுசில வீரர்களில் இவரும் ஒருவர் என சாதனை பட்டியலில் இடம் பிடித்தார்.

இரண்டாவது இன்னிங்சில் இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர், நிதானமாக விளையாடி அரைசதம் கடந்தார். அவர் 65 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் அறிமுக போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் சதம் மற்றும் அரை சதம் விளாசிய ஒரே இந்திய வீரர் என்ற மகத்தான சாதனையை தனதாக்கினார்.

ஐந்தாவது நாளில் நியூசிலாந்து அணியை 9 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தி, ஒரு விக்கெட் எடுக்கமுடியாமல் போனதால், ஆட்டம் டிராவில் முடிந்தது.

இப்போட்டியில் சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். போட்டி முடிந்து பேசிய அவர் பேசியதாவது:

“முதல் போட்டியில் வெற்றி பெறுவோம் என நினைத்தேன். டிராவில் முடிந்தது வருத்தமாக இருக்கிறது. வெற்றி பெற்றிருந்தால் கொண்டாட்டத்தின் உச்சத்தில் இருந்திருப்பேன்.

மைதானம் தற்போது வரை மாறாமல் அப்படியே இருக்கிறது. போதிய பவுன்ஸ் மற்றும் சுழற்சி இல்லாததால் சற்று போராட வேண்டியிருந்தது. பந்துவீச்சாளர்கள் தங்களது முழு பங்களிப்பை கொடுத்தனர். விக்கெட் ஒத்துழைக்கவில்லை. பேட்டிங்கில் சஹா மற்றும் அஸ்வின் உடன் இணைத்து ஆடியதும் பார்ட்னர்ஷிப் அமைத்தும் எனக்கு கிடைத்த நல்ல அனுபவம். ஒட்டுமொத்த அணியாக செயல்பட்டு, எனது முழு பங்களிப்பை கொடுத்தது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

டிராவிட் என்னிடம் நீண்டநேரம் களத்தில் நிலைத்து நின்று அதிக பந்துகள் எதிர்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். இரண்டாவது இன்னிங்சில் நான் அதனை செய்தேன். அவர் கொடுத்த அறிவுரை எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது.” என்று பேட்டியளித்தார்.

Mohamed:

This website uses cookies.