உண்மைய சொல்லி தான ஆகனும்… ஆஃப்கானிஸ்தானிடம் நாங்க பட்ட அசிங்கத்திற்கு இவர்கள் தான் காரணம்; சக வீரர்களை விமர்சித்த பாபர் அசாம்
உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 22வது போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியும், பாகிஸ்தான் அணியும் மோதின.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாம் 74 ரன்களும், அப்துல்லாஹ் சஃபீக் 58 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி 282 ரன்கள் எடுத்தது.
இதன்பின் 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்கள் யாருமே எதிர்பார்க்காத வகையில் மிக சிறப்பான துவக்கத்தை அமைத்து கொடுத்தனர்.
அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹ்மத்துல்லாஹ் குர்பாஸ் 65 ரன்களும், இப்ராஹிம் ஜார்டன் 87 ரன்களும் எடுத்தனர். மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ரஹ்மத் ஷா (77*) மற்றும் நான்காவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஷாகிதி (48*) ஆகியோரும் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை அசால்டாக சிதறடித்ததன் மூலம் 49வது ஓவரில் இலக்கை எட்டிய ஆஃப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்தது.
இந்தநிலையில், ஆஃப்கானிஸ்தான் அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம், பந்துவீச்சில் சொதப்பியதே தோல்விக்கான முக்கிய காரணம் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாபர் அசாம் பேசுகையில், “வெற்றிக்கு தேவையான இலக்கை தான் நாங்கள் நிர்ணயித்திருந்தோம், ஆனால் பந்துவீச்சில் சொதப்பிவிட்டோம். குறிப்பாக எங்களது சுழற்பந்து வீச்சாளர்கள் தங்களது வேலையை சரியாக செய்து கொடுக்கவில்லை. ஒரு ஓவரில் 4 நல்ல பந்துகளை வீசினாலும், 2 மோசமான பந்துகளை எங்கள் சுழற்பந்து வீச்சாளர்கள் வீசி ஆஃப்கானிஸ்தான் அணிக்கு இலகுவாக பவுண்டரிகளையும் கொடுத்தனர். இதனால் எங்களால் ஆஃப்கானிஸ்தான் வீரர்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தவே முடியவில்லை. ஆஃப்கானிஸ்தான் அணியுடனான இந்த தோல்வி மிகுந்த வேதனையை கொடுத்துள்ளது. மிடில் ஓவர்களில் நாங்கள் சிறப்பாக பந்துவீசவில்லை. பீல்டிங்கிலும் நாங்கள் மோசமாக செயல்பட்டோம் என்பதே உண்மை. ஆஃப்கானிஸ்தான் அணி பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் மிக சிறப்பாக செயல்பட்டது. இதுவே அவர்களது வெற்றிக்கு காரணம். ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எனது வாழ்த்துக்கள்” என்று தெரிவித்தார்.