வங்கதேச வீரர்களை மின்னல் தாக்க வேண்டும்: அரையிறுதிக்கு தகுதி பெற ஐடியா பாகிஸ்தானின் முன்னால் கேப்டன்!

இங்கிலாந்து அணி நியூஸிலாந்து அணியை நேற்று செஸ்டர் லீ ஸ்ட்ரீட் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் 119 ரன்களில் வீழ்த்தியதையடுத்து பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்புகளுக்கு ஆணியறையப்பட்டது.

வங்கதேசத்துக்கு எதிராக பாகிஸ்தானுக்கு இருக்கும் ஒரே போட்டியில் பாகிஸ்தான் முதலில் பேட் செய்து 311 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். பாகிஸ்தான் முதலில் பந்து வீச நேரிட்டால் முதல் பந்து வீசுவதற்கு முன்பாகவே அரையிறுதி சாத்தியமற்ற வாய்ப்பிலிருந்தும் வெளியேறும். இத்தகைய விசித்திர நிலைமை அந்த அணிக்கு.

இந்நிலையில் முன்னாள் பாகிஸ்தான் வீரர் மொகமது யூசுப் உள்நாட்டுத் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் கூறும்போது, “பாகிஸ்தான் ஏற்கெனவே வெளியேறிவிட்டது இதில் எந்த வித சந்தேகமும் இல்லை. ஆனால் வங்கதேச அணி மீது இடிவிழுந்தால் அதனால் அவர்கள் விளையாட முடியாமல் போனால், அல்லது அவர்கள் ஒருவேளை அனைவரும் ஆடமுடியாத அளவுகு உடற்தகுதியை இழந்தால்.. ஒரு ஓவரில் 10 ரன்கள் எடுத்தால் போதும் என்ற நிலை பாகிஸ்தானுக்கு கிடைத்தால்… நாம் தகுதி பெறலாம்.

இப்போதைய நிலையில் சாத்தியமேயில்லை. எவ்வளவு கீழ்நிலையில் இருக்கும் கத்துக்குட்டி அணியுடன் ஆடினாலும் 316 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற முடியாது. வேறு வழியில்லை எதிரணியினரை மின்னல் தாக்கத்தான் நாம் வேண்டிக்கொள்ள வேண்டும்” என்று மொகமது யூசுப் ‘ஜோக்’ அடித்ததாக பாகிஸ்தான் ஊடகச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தற்போது 9 போட்டிகளில் 11 புள்ளிகளுடன் +0.175 ரன் ரேட்டில் நியூஸிலாந்து அணி 4-வது இடத்தில் இருக்கிறது. பாகிஸ்தான் அணி தற்போது 9 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருக்கிறது. இன்னும் வங்கதேசத்துக்கு எதிரான ஒரு ஆட்டம் மட்டும் இருக்கிறது.

இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, வங்கதேசத்தை வென்றால் நியூஸிலாந்துக்கு இணையாக 5 வெற்றிகள் 11 புள்ளிகளைப் பெறும். லீக் சுற்றிலும் நியூஸிலாந்து அணியை பாகிஸ்தான் வென்றதால், அந்த சலுகை புள்ளியும் கிடைக்கும்.

ஆனால், வங்கதேச அணியை எத்தகைய ரன் ரேட்டில் வெல்வதில்தான் சிக்கல் நிலவி வருகிறது. தற்போது நியூஸிலாந்து அணி +0.175 ரன் ரேட்டில் இருக்கிறது. பாகிஸ்தான் அணியோ -0.792 ரன் ரேட்டில் இருக்கிறது. நியூஸிலாந்தின் ரன் ரேட்டை முறியடிப்பது பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய சவாலாகும்.

அதாவது வங்கதேசம் அணியை 308 ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே பாகிஸ்தான் அணி ரன் ரேட்டை அதிகமாகப் பெற்று அரையிறுதிக்குள் செல்ல முடியும்.

கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ரன்கள் வெற்றியை நியூஸிலாந்து மட்டுமே வைத்துள்ளது. அயர்லாந்து அணிக்கு எதிராக 2 விக்கெட்டுகளுக்கு 402 ரன்கள் சேர்த்த நியூஸிலாந்து அணி 112 ரன்களில் அயர்லாந்து அணியைச் சுருட்டி 290 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதுதான் அதிகபட்ச ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாகும். ஒருவேளை வங்கதேசத்தை 308 ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் அது உலக சாதனையாக மாறும்.

Sathish Kumar:

This website uses cookies.