இந்திய அணி கடந்த 6 மாதங்களாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணியுடன் சுற்றுப்பயணத் தொடரில் விளையாடி வந்தது. ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி ஒரு நாள் தொடரை இழந்தாலும் டி20 மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியது. ஆஸ்திரேலிய தொடரில் இந்திய இளம் வீரர்கள் பலர் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர்.
இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியுடன் மிகப்பெரிய தொடரில் விளையாடிய இந்திய அணி மூன்று 3 பார்மட்களையும் கைப்பற்றி அசத்தியது. இதன் மூலம் தற்போது இந்திய அணி 3 பார்மட்டிலும் சிறந்த நிலையில் இருக்கிறது. இந்த இரு தொடர்கள் மூலம் திறமை வாய்ந்த இளம் வீரர்களை கண்டறிந்து இருக்கிறது இந்திய அணி. குறிப்பாக சர்துல் தாகூர், ரிஷப் பண்ட், பிரசித் கிருஷ்ணா, சூர்யகுமார் யாதவ், இசான் கிசான் ராகுல் சாஹர் ஆகியோர் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டனர்.
இந்நிலையில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியா தொடரை தொடர்ந்து தற்போது முடிவடைந்த இங்கிலாந்து தொடரிலும் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இதன் மூலம் தற்போது இந்திய அணியில் நிரந்தர இடம் பிடித்து இருக்கிறார்.
இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற இந்த சுற்றுப்பயணத்தில் ரிஷப் பண்ட் ஒரு சதம்(101) மற்றும் நான்கு அரை சதம் (58,77,78,91) விளாசி இருக்கிறார். இந்த இங்கிலாந்து தொடரில் ரிவர்ஸ் ஷாட்களை அடித்து ரசிகர்களை மகிழ வைத்தார். மேலும் சிக்ஸர் மழையை பொழிய வைத்தார். இந்த ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தொடரின் மூலம் ரிஷப் பண்டிற்கு அதிக ரசிகர்கள் உருவாகி உள்ளனர்.
இந்நிலையில், ரிஷப் பண்ட்டின் அதிரடி ஆட்டம் குறித்து பேசிய சரண்தீப் சிங் “ரிஷப் பண்ட் தற்போது தலைசிறந்த வீரராக மாறி இருக்கிறார். முன்பெல்லாம் இவர் உடற்தகுதி பிரச்சினையால் சிறப்பாக விளையாட முடியாமல் தவித்து வந்தார். ஆனால் தற்போது தீவிர பயிற்சி மேற்கொண்டு உடற்தகுதியுடன் இருக்கிறார்.
23 வயதே ஆன இவர் 30 வயதான சீனியர் வீரர்கள் போல் சிறப்பாக விளையாடி வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தனது ஆட்டத்தை மெருகேற்றிருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் பண்ட் அடுத்த 10 வருடங்களுக்கு விளையாடுவார்” என்று சரண்தீப் சிங் கூறியிருக்கிறார்.