இந்த ஒரு விசயத்தில் விராட் கோஹ்லி கொஞ்சம் வேற மாதிரி; பார்த்தீவ் பட்டேல் ஓபன் டாக்
டிரசிங் ரூமை கையாளுவதில் தோனி, ரொஹித் சர்மாவை போன்று அல்லாமல் விராட் கோஹ்லி முற்றிலும் மாறுபட்டவர் என சீனியர் விக்கெட் கீப்பர் பார்த்தீவ் பட்டேல் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் விக்கெட் கீப்பரான பார்த்திவ் படேல் சிறுவயதிலேயே இந்திய டெஸ்ட் அணியில் விளையாடியவர். தோனியின் வருகைக்குப் பின்பு இந்திய அணியில் மீண்டும் இடம்பெறுவதற்கான வாய்ப்பு பார்த்திவுக்கு அரிதாகவே கிடைத்தது. இப்போது அவர் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்புவதற்கான வாய்ப்பு இல்லையென்றாலும் ஐபிஎல் தொடர்களில் பெங்களூர் அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார்.
இந்தநிலையில், சமீபத்தில் நடைபெற்ற முகநூலில் கலந்துரையாடல் ஒன்றில் ஆகாஷ் சோப்ராவுடன் பேசிய பார்த்தீவ் பட்டேல் தனது கிரிக்கெட் அனுபவம் குறித்து பல்வேறு நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார்.
அதில் பார்த்தீவ் பட்டேல் பேசியதாவது;
கோஹ்லியின் கேப்டன்சி வித்தியாசமானது. அவர் அனைத்திலும் முன்னிருந்து முக்கியத்துவப்படுத்தி செயல்பட வேண்டும் என நினைப்பார். எப்போதும் ஆக்ராஷமோக இருப்பார், அது அவருடைய பாணி. ஆனால் தோனியும், ரோஹித் சர்மாவும் அப்படி அல்ல. அவர்கள் மிகவும் அமைதியாக இருப்பார்கள். அதற்கு அப்படியே எதிராக கோலி செயல்படுவார்” என்றார்.
மேலும் தொடர்ந்த பார்த்திவ் படேல் “தோனி ஒவ்வொரு வீரரின் திறன் பற்றி நன்கு அறிவார். அந்த வீரரின் முழு திறனையும் திறமையையும் அறிந்து அவர்களின் ஆற்றலை வெளியே கொண்டு வருவார். ரோஹித் சர்மா திட்டமிடுதலில் கெட்டிக்காரர். மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்துவதிலேயே அதை நாம் தெரிந்துக் கொள்ளலாம். 2014 ஐபிஎல் போட்டியில் இருந்து ரோகித் தன் திறனை நன்றாகவே வளர்த்துக்கொண்டார். வீரர்களை உபயோகப்படுத்துவதில் தோனியும், ரோகித்தும் சிறந்தவர்கள்” என தெரிவித்துள்ளார்.