ஆசியக் கோப்பை டி20 தொடரை நடத்துவதைப் பாகிஸ்தான் கைவிடுவதற்கான வாய்ப்பே அதிகம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் இஷான் மானி தெரிவித்துள்ளார்.
“அசோசியேட் உறுப்பினர்களின் வருவாயை உறுதி செய்ய வேண்டியுள்ளது. முழு உறுப்பினர்கள் பற்றியதல்ல இது, அசோசியேட் உறுப்பினர்கள் பற்றியது. ஆசியக்கோப்பை மைதானங்கள் பற்றி இது தொடர்பாக அனைவரிடமும் கலந்தாலோசித்த பிறகு முடிவெடுப்போம்
முழுத் தொடரையும் பாகிஸ்தானில் நடத்த முடியவில்லை என்றால் பாகிஸ்தான் போட்டித் தொடரை நடத்துவதைக் கைவிடவே செய்யும்” என்றார்.
பிசிபியின் தலைமைச் செயலதிகாரி வாசிம் கானும் இதையே தெரிவித்தார்.
இந்திய அணி பாகிஸ்தான் சென்று ஆட மறுத்து தங்கள் போட்டிகளை நடுநிலை மைதானங்களில் விளையாடுகிறோம் என்று கூறியதையடுத்து இஷான் மானி இவ்வாறு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில்,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான உமர் அக்மல் மீதான லஞ்ச குற்றச்சாட்டு விசாரணை முடியும் வரை, அவர் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தடை விதித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
விசாரணை தற்போது நடைபெற்று வருவதால், இவ்விவகாரம் குறித்து எதுவும் தெரிவிக்க முடியாது எனக்கூறியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், உமர் அக்மல் மீதான தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கிரிக்கெட் தொடர்பான எந்த நிகழ்வுகளிலும் உமர் அக்மல் பங்கேற்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது. எனினும், அக்மல் மீதான குற்றச்சாட்டு குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கவில்லை.
அக்மலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவர் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் அணியான குவெட்டா கிளேடியட்டர்ஸ் அணி, மாற்று வீரரை சேர்த்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
29 -வயதான அக்மல், கடைசியாக பாகிஸ்தான் அணிக்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விளையாடினார். பாகிஸ்தான் அணிக்காக இதுவரை 16 டெஸ்ட் போட்டிகளிலும் 121 ஒருநாள் போட்டிகளிலும், 84 இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலும் உமர் அக்மல் விளையாடியுள்ளார்.