விராட் கோஹ்லியை மீண்டும் ஒப்பந்தம் செய்தது பஞ்சாப் நேஷனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கியின் விளம்பர தூதுவராக மீண்டும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
குஜராத்தை சேர்ந்த வைர நகை வியாபாரியான நீரவ் மோடி உலகம் முழுவதும் பல இடங்களில் தனது நகைக்கடைகளை வைத்துள்ளார். இவர் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் இருந்து சுமார் 11 ஆயிரத்து 400 கோடி ரூபாய் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக வங்கி சார்பில் சி.பி.ஐ.யிடம் இரண்டு புகார்கள் அளிக்கப்பட்டன.
அதனை தொடர்ந்து, ஜனவரி 31-ம் தேதி அவரது நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் தேடப்படுவதாக ஜனவரி 31ம் தேதியே சி.பி.ஐ. அறிவித்தது. ஆனால் கடந்த ஜனவரி 1-ம் தேதியே நீரவ்மோடி நாட்டைவிட்டு வெளியேறியதாக தகவல் வெளியானது.
இதையடுத்து, நீரவ் மோடிக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.5,100 கோடி மதிப்புள்ள பொருட்களையும், தங்கம், வைரம் உள்ளிட்ட ஆபரணங்களையும் அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.
இந்நிலையில், இந்த மோசடி சம்பவத்தையடுத்து அந்த நிறுவனத்தின் விளம்பரத்தூதராக இருந்த விராத் கோலி தனது ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டதாக தகவல் வெளியானது. இதற்கு பதிலளித்த அந்த வங்கி நிர்வாகம், பிஎன்பி வங்கியின் விளம்பரத்தூதராக விராத் கோலி தொடர்ந்து செயல்படுவார் என தெரிவித்துள்ளனர்.