நுவண்பிரதீப் மற்றும் மலிங்காவின் அபார பந்துவீச்சால் 34 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி உலகக் கோப்பையில் முதல் வெற்றியை பதிவு செய்தது இலங்கை.
முதலில் ஆடிய இலங்கை 201 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் 152 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கார்டிஃப் சோபியா கார்டனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கன் பவுலிங்கை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து இலங்கை தரப்பில் கேப்டன் திமுத் கருணரத்னே-குஸால் பெரைரா ஆகியோர் களமிறங்கி நிலையான தொடக்கத்தை தந்தனர். திமுத் கருணரத்னே 30 ரன்கள் எடுத்த நிலையில், முகமது நபி பந்துவீச்சில் அவுட்டானார்.
இதைத் தொடர்ந்து பெரைரா-லஹிரு திரிமனே இணைந்து நிதானமாக ஸ்கோரை உயர்த்தினர். 25 ரன்கள் எடுத்த லஹிருவை போல்டாக்கினார் நபி. ஒருமுனையில் குஸால் பெரைரா நிலையாக ஆடி வந்த நிலையில், மறுமுனையில் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்ததால், இலங்கை அணி நெருக்கடிக்கு ஆளானது.
குஸால் மெண்டிஸ் 2, மூத்த வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் 0, தனஞ்செய டி சில்வா 0, திஸாரா பெரைரா 2, இஸுரு உடானா 10 என சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினர்.
குஸால் பெரைரா அரைசதம்: 8 பவுண்டரியுடன் 81 பந்துகளில் 78 ரன்களை விளாசிய குஸால் பெரைரா, ரஷித் கான் பந்துவீச்சில் முகமது ஷஸாதிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தனது 12-ஆவது ஒருநாள் அரைசதத்தையும் பதிவு செய்தார் பெரைரா.
பின்னர் சுரங்க லக்மல் 2, லஸித் மலிங்கா 0 ஆகியோர் களத்தில் இருந்த போது திடீரென மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
21-ஆவது ஓவரின் போது 1 விக்கெட் இழப்புக்கு 144 என வலுவான நிலையில் இருந்த இலங்கை, பின்னர் 159/6 என சரிந்தது.
மழையால் ஆட்டம் பாதிப்பு: 41 ஓவர்களாக குறைப்பு
ஆட்டம் 50 ஓவர்களில் இருந்து 41 ஓவர்களாக குறைக்கப்பட்டு தொடங்கியது. தெளலத் ஸட்ரன் பந்துவீச்சில் 4 ரன்களுக்கு போல்டானார் மலிங்கா. 37-ஆவது ஓவரின் போது இலங்கையின் ஸ்கோர் 200-ஐ கடந்தது. நுவன் பிரதீப் ரன் ஏதும் எடுக்காமல் ரஷித் கான் பந்தில் போல்டானார். இறுதியில் 36.5 ஓவர்களில் 201 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இலங்கை.
ஆப்கன் அபார பந்துவீச்சு: ஆப்கன் தரப்பில் முகமது நபி அபாரமாக பந்துவீசி 30 ரன்களை மட்டுமே தந்து 4 விக்கெட்டை வீழ்த்தினார். ரஷித் கான் 2-17 விக்கெட்டை சாய்த்தார்.
மழையால் ஓவர்கள் டிஎல்எஸ் முறையில் ஓவர்கள் எண்ணிக்கை 41 ஆக குறைக்கப்பட்ட நிலையில் 187 ரன்கள் வெற்றி இலக்குடன் ஆப்கன் தரப்பில் முகமது ஷஸாத், ஹஸ்ரத்துல்லா ஸஸாய் களமிறங்கினர்.
இருவரும் அடித்து ஆட முயன்ற நிலையில், ஷஸாத்தை 7 ரன்னுடன் அவுட்டாக்கினார் மலிங்கா. 2 ரன்கள் எடுத்திருந்த ரஹ்மத் ஷா, உடனா பந்துவீச்சில் வெளியேறினார். சிறப்பாக ஆடி வந்த ஹஸ்ரத்துல்லாவும் 30 ரன்களோடு நுவண் பிரதீப் பந்துவீச்சில் அவுட்டானார்.
15-ஆவது ஓவர் நிறைவில் 4 விக்கெட் இழப்புக்கு 57 ரன்களை எடுத்திருந்தது ஆப்கானிஸ்தான்.
ஹஸ்மத்துல்லா 4, நபி 11, கேப்டன் குல்பதீன் நைப் 23, ரஷித் கான் 2, தெளலத் ஸட்ரன் 6, ஹமித் ஹாசன் 6 என சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினர். நஜிபுல்லா ஸட்ரன் மட்டுமே நிலைத்து ஆடி 43 ரன்களை சேர்த்து அவுட்டானார்.
இறுதியில் 32.4 ஓவர்களில் 152 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஆப்கானிஸ்தான்.
மழையால் ஓவர்கள் குறைக்கப்பட்டு 187 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட போதிலும், இலங்கையின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தோற்றது ஆப்கன் அணி.
நுவண் பிரதீப், மலிங்கா அபாரம்:
இலங்கை தரப்பில் அபாரமாக பந்துவீசி நுவண்பிரதீப் 4-31, மலிங்கா 3-39 விக்கெட்டுகளை வீழ்த்தினர். நியூஸி.யிடம் படுதோல்வியடைந்த இலங்கைக்கு இந்த வெற்றி உற்சாகத்தை அளித்துள்ளது.