இந்திய அணியை தொடர்ந்து வெற்றி பாதையில் அழைத்து சென்று கொண்டிருக்கும் கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு உண்மையான பிரச்சனைகள் இனி தான் வர உள்ளது என முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.
தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற விராட் கோலி, கடந்த 7 வருடங்களாக இந்திய அணியை மிக சிறப்பாக வழிநடத்தி வந்தார். விராட் கோலி தலைமையிலான இந்திய அணி உலகின் நம்பர் 1 அணியாக திகழ்ந்த போதிலும், விராட் கோலி தலைமையில் இந்திய அணி ஒரு ஐசிசி., கோப்பையை கூட வெல்லாதது அவரது கேப்டன் பதவிக்கும் பிரச்சனையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக வெறும் 2 மாத கால இடைவேளையில் விராட் கோலி அனைத்து விதமான போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்தும் விலகும் நிலை ஏற்பட்டது.
விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து, ரோஹித் சர்மாவிடம் கேப்டன் ஒப்படைக்கப்பட்டது. ரோஹித் சர்மாவும் இந்திய அணியை மிக சிறப்பாக வழிநடத்தி வருகிறார். இலங்கை அணிக்கு எதிரான டி.20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர் என இரண்டையும் இந்திய அணி முழுமையாக கைப்பற்றியதால், ரோஹித் சர்மாவின் கேப்டன்சியை முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.
விராட் கோலியைவிட ரோஹித் சர்மா மிக சிறந்த கேப்டனாக திகழ்வார் என முன்னாள் வீரர்கள் பலர் ரோஹித் சர்மாவை புகழ்ந்து பேசி வரும் நிலையில், முன்னாள் ஆஸ்திரேலிய விரரான பிராட் ஹாக்கோ, ரோஹித் சர்மா உண்மையான பிரச்சனைகளை இனி தான் எதிர்கொள்ள உள்ளார் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிராட் ஹாக் பேசுகையில், “ ஒரு கேப்டனாக ரோஹித் சர்மா சவாலான தொடர்களை இனி தான் எதிர்கொள்ள உ ள்ளார். இந்திய அணி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது, நிச்சயமாக இந்த தொடர் ரோஹித் சர்மாவிற்கு பெரும் சவாலாக இருக்கும். ரோஹித் சர்மா இக்கட்டான சூழ்நிலைகளை எப்படி கையாளுகிறார் என்பதை பார்க்க நானும் காத்துள்ளேன். கடும் சவால் நிறைந்த போட்டிகளில் ரோஹித் சர்மா, எப்பொழுதும் போல் கூலாக இருக்கிறாரா இல்லை ஆக்ரோஷமாக மாறுகிறாரா..? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அதே போல் இந்திய அணி அடுத்தடுத்து தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து போன்ற சவாலான அணிகளுடனான தொடரில் பங்கேற்க உள்ளது இதுவும் ரோஹித் சர்மாவிற்கு சவாலான தொடர்களாக இருக்கும். இது அனைத்தையும் விட முதன் முறையாக டி.20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி ரோஹித் சர்மாவின் தலைமையின் கீழ் விளையாட உள்ளது, இந்த தொடரில் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி எப்படி உள்ளது என்பதை பார்க்கவும் நான் காத்துள்ளேன்” என்று தெரிவித்தார்.