ஊக்க மருந்து உட்கொண்டதன் காரணமாக பிருத்வி ஷாவிற்கு 8 மாத காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஷாவின் பயிற்சியாளர் பதிலளித்துள்ளார்
2018 ஆம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டவர்களின் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர் பிருத்வி ஷா. அண்டர் 19 அணியில் சிறப்பாக செயல்பட்டதால், 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய அணிக்கு ஆட அழைப்பு விடுக்கப்பட்டார்.
இதன்மூலம் சச்சினுக்கு அடுத்ததாக மிக குறைந்த வயதில் இந்திய அணியில் இடம் பெற்றவர் என்ற பெருமையை பெற்றார். அதன் பிறகு, ஆஸ்திரேலியா தொடரின் போது இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறினார்.
இந்த ஆண்டின் துவக்கத்தில் உடல்நிலை குன்றியதன் காரணமாக காஃப் சிரப் உட்கொண்டிருந்தார். ஊக்கமருந்து பரிசோதனையில் ஷா ஈடுபடுத்தப்பட்ட போது, அவர் அருந்திய காஃப் சிரப்பில் ஊக்க மருந்து இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் 8 மாத காலம் கிரிக்கெட் போட்டிகளில் ஆட இவருக்கு தடை விதிக்கப்பட்டது.
பிசிசிஐ யின் இந்த அதிரடி முடிவு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. மேலும் இதை தெரியாமல் உட்கொண்டதாகவும் அதை ஒப்புக் கொள்கிறேன் என்றும் பிருத்வி ஷா தெரிவித்துள்ளார்.
அதேபோல ஷா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பேசிய அவரது பயிற்சியாளர் சந்தோஷ் பின்குட்கார் கூறுகையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் அளவிற்கு தகுதி பெற்றிருக்கும் ஒருவர் தான் உட்கொள்ளும் அனைத்து பொருள்களிலும் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். இதை சோதனை காலமாக எடுத்துக்கொண்டு முழு முயற்சியுடன் நன்கு பயிற்சி செய்து மீண்டும் அணிக்கு திரும்புகையில் மேலும் சிறப்பாக செயல்பட வேண்டும். இதை ஷா நிச்சயம் செய்வார் என நான் நம்புகிறேன் என்றார்.