நான் அணியிலிருந்து நீக்கப்பட்டபோது மிகவும் வேதனைப்பட்டேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் செட்டேஷ்வர் புஜாரா மனம் திறந்து பேசியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் போட்டிகளில் முக்கியமான பேட்ஸ்மேன் புஜாரா. இந்திய கிரிக்கெட்டின் சுவராகக் கருதப்படும் ராகுல் டிராவிட்டுக்குப் பிறகு, நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாடக் கூடிய வீரராக புஜாரா அடையாளம் காணப்படுகிறார். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலிருந்து புஜாரா நீக்கப்பட்டார். பின்பு, 2016 இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
‘இந்தியா டுடே’வுக்கு பேட்டியளித்துள்ள புஜாரா, பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் ” அது அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. நானும் ஒரு சாதாரண மனிதன்தான். என்னை அணியிலிருந்து நீக்கியபோது மிகவும் வேதனையடைந்தேன். ஆனால் இதனைப் புரிந்துக்கொண்டு என் ஆட்டத்திறனை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொண்டேன். நிச்சயமாக ஒரு நாள் அணிக்கு திரும்புவேன் என்ற நம்பிக்கை இருந்தது. அதற்கு என்னை தயார்ப்படுத்திக்கொள்ள தொடங்கினேன். அணியிலிருந்து நீக்கப்பட்டதற்காக உடைந்து போய் ஓரிடத்தில் முடங்கிவிடவில்லை” என்றார்.
மேலும் தொடர்ந்த புஜாரா ” நிறைய பயிற்சிகள் மேற்கொண்டேன். ஆட்டத்தில் எங்கெல்லாம் தவறு செய்கிறேன் என்பதையும் அறிந்து, அதனைச் சரி செய்தேன். நம்பிக்கையுடன் இருந்தேன். இங்கிலாந்தில் கவுண்ட்டி அணிக்காக விளையாடியது எனக்குப் பெரிதும் கைகொடுத்தது. என் கடின உழைப்புக்கு வெற்றியும் கிடைத்தது. சில மாதங்களில் அணிக்குத் திரும்பி சிறப்பாக விளையாட ஆரம்பித்தேன். அந்த ஆட்டத்திறன் இப்போது வரை தொடர்கிறது” என்றார் அவர்.
2017 இல் இருந்து 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா 8 சதங்களை விளாசியுள்ளார். 2018 – 2019 ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்தியா வென்றதற்கு புஜாராவின் விளாசல் கைகொடுத்தது. அந்தத் தொடரில் மட்டும் 521 ரன்களை குவித்து அசத்தினார் புஜாரா.