வயசு தான் கம்மி… ஆனா சாதனை ரொம்ப பெருசு; 48 வருட உலகக்கோப்பை வரலாற்றில் மிகப்பெரும் சாதனை படைத்த ரச்சின் ரவீந்திரா
நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்காக விளையாடி வரும் இளம் வீரரான ரச்சின் ரவீந்திரா, உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரும் சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.
சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் இதுவரை இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. எஞ்சியுள்ள ஒரு இடத்தை பிடிக்க பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையே போட்டி நடைபெற்று வருகிறது.
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் மிகப்பெரும் வெற்றி பெற்றுவிட்டால் நியூசிலாந்து அணி நேரடியாக அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பு இருக்கும் நிலையில், இலங்கை அணிக்கு எதிரான போட்டியின் மூலம் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ரச்சின் ரவீந்திரா மிகப்பெரும் சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த 23 வயது இளம் வீரரான ரச்சின் ரவீந்திராவிற்கு நடப்பு உலகக்கோப்பை தொடர் தான் முதல் உலகக்கோப்பை தொடர். இந்திய அணியுடனான போட்டி உள்பட நடப்பு உலகக்கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளிலும் மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் ரச்சின் ரவீந்திரா இதன் மூலம் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான போட்டியின் மூலம் நடப்பு உலகக்கோப்பை தொடரில் 550 ரன்களை கடந்த ரச்சின் ரவீந்திரா, இதன் மூலம் தனது அறிமுக உலகக்கோப்பை தொடரில் அதிகமான ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
அதே போல் தனது 25 வயதிற்குள் ஒரே உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில், முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளார். கடந்த 1996ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் சச்சின் டெண்டுல்கர் 523 ரன்கள் குவித்திருந்ததே இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது, தற்போது இதனை ரச்சின் ரவீந்திரா முறியடித்து வரலாறு படைத்துள்ளார்.