தொடர்ந்து சொதப்பி வரும் புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரையும் அணியில் இருந்து நீக்க வேண்டும் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
ஒருநாள் மற்றும் டி.20 போட்டிகளுக்கான இந்திய அணியில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், கடந்த சில வருடங்களாக டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் மிகப்பெரும் நம்பிக்கையாக திகழ்ந்து வந்த புஜாரா மற்றும் ரஹானே சமீபத்தில் நடைபெற்ற அனைத்து தொடர்களிலும் மிக மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடமாகவே இருவரும் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும், இந்திய அணியோ இருவர் மீதும் நம்பிக்கை வைத்து தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வருகிறது, ஆனாலும் இருவரும் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து நடையை கட்டுவதையே வாடிக்கையாக வைத்து வருகின்றனர். இதனால் புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர்கள் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் கடும் விமர்ச்சனங்களிற்கு ஆளாகி வருகின்றனர். புஜாரா மற்றும் ரஹானேவிற்கு இனி இந்திய அணியில் இடமே கொடுக்க கூடாது, அவர்களது இடத்தில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகிறது.
இந்தநிலையில், இது குறித்து பேசியுள்ள இந்திய அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரான தினேஷ் கார்த்திக், புஜாரா மற்றும் ரஹானே விசயத்தில் இந்திய அணி சரியான முடிவை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து தினேஷ் கார்த்திக் பேசுகையில், “ டெஸ்ட் அணியில் ராகுல் டிராவிட் அவரது கெரியரின் கடைசி கட்டத்தில் இருந்தபோது, அவரது 3ம் பேட்டிங் ஆர்டரை கைப்பற்றியவர் புஜாரா. ராகுல் டிராவிட்டின் கெரியர் அத்துடன் முடிந்தது. வாழ்க்கை ஒரு வட்டம். அன்றைக்கு ராகுல் டிராவிட்டின் கெரியரை முடித்துவைத்த புஜாராவின் கெரியர், இன்றைக்கு ராகுல் டிராவிட்டால் முடித்துவைக்கப்படவுள்ளது. ரஹானே மற்றும் புஜாரா ஆகிய இருவரையும் நீக்கும் கடினமான முடிவை ராகுல் டிராவிட் எடுத்தாக வேண்டும் ” என தெரிவித்துள்ளார்.