உலக கோப்பையில் பெரும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி, ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது.
உலக கோப்பையில் எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு ஆஃப்கானிஸ்தான் அணி ஆடவில்லை. உலக கோப்பையை தோல்வி எதிரொலியாக ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் நீக்கப்பட்டு மூன்று விதமான அணிகளுக்கும் இளம் வீரர் ரஷீத் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்று விதமான அணிகளுக்குமே ரஷீத் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆஃப்கானிஸ்தான் அணிக்கு புதிய ரத்தம் பாய்ச்சி உத்வேகப்படுத்தும் விதமாக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ரஷீத் கான் கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு, ஆஃப்கானிஸ்தான் அணி முதன்முறையாக வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்து ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் ஆடிவருகிறது.
இன்று தொடங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. இந்த போட்டியில் தனது கேப்டன்சி பயணத்தை தொடங்கியுள்ள ரஷீத் கான், டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டின் இளம் கேப்டன் என்ற பெருமைக்கு ரஷீத் கான் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார். 20 வயது முடிந்து 350 நாட்களில் ரஷீத் கான் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது கேப்டன்சியை பயணத்தை தொடங்கியுள்ளார். இதன்மூலம் டெஸ்ட் அணியின் இளம் கேப்டன் என்ற சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டன் தைபு, 20 வயது முடிந்து 358 நாட்களில், டெஸ்ட் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு இளம் கேப்டன் என்ற பெருமையை பெற்றிருந்தார். தற்போது அந்த பெருமையை ரஷீத் கான் பெற்றுள்ளார்.
இதுகுறித்து ரஷித் கான் கூறுகையில் ‘‘நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். அணியின் கேப்டனாக பணியாற்றுவது எனக்கு புதியவை. முடிந்த அளவிற்கு என்னுடைய சிறந்த திறனை வெளிப்படுத்தி மகிழ்ச்சியாக ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்.
வங்காள தேச அணிக்கு நாங்கள் மிகவும் மரியாதை கொடுக்கிறோம். எங்களை விட அவர்கள் உயர்ந்த நிலையில் உள்ளனர். ஆனால், வங்காளதேசத்தை கண்டு நாங்கள் பயப்படவில்லை’’ என்றார்.
ஆப்கானிஸ்தான் அணி கடந்த 2017-ல் டெஸ்ட் அந்தஸ்து பெற்றது. 2018-ல் இந்தியாவுக்கு ஏதிராக வரலாற்று சிறப்புமிக்க முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. 2-வது டெஸ்ட் போட்டியில் அயர்லாந்தை எதிர்த்து விளையாடியது.