நோட் பண்ணிகொங்க.. சிஎஸ்கே, ஆர்சிபி பிளே-ஆப் உறுதி… மீதியுள்ள 2 அணிகள் எது? – ஐபிஎல் பிளே-ஆப் குறித்து ஏபி டி வில்லியர்ஸ் கணிப்பு!

இந்த வருடம் ஐபிஎல் பிளே-ஆப் சுற்றுக்கு எந்தெந்த அணிகள் தகுதிபெறும் என்று கணித்துள்ளார் முன்னாள் ஆர்சிபி வீரர் ஏபி டி வில்லியர்ஸ்.

பத்து அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் 31ஆம் தேதி துவங்கியது. இதில் முதல் போட்டியாக குஜராத் டைட்டன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது.

கடைசியாக 2019ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் அனைத்து அணிகளின் மைதானங்களிலும் நடைபெற்றது. அதன்பின் கொரோனா தொற்று வந்ததால் குறிப்பிட்ட சில மைதானங்களுக்குள்ளேயே அனைத்து போட்டிகளும் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த வருடம் கொரோனா தொற்று அதிக அளவில் குறைந்துள்ளதால் பழைய முறைப்படி அந்தந்த அணிகளின் சொந்த மைதானங்களில் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.

கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலர் ஐபிஎல் குறித்த கருத்துக்களை தெரிவிக்க மறுக்கவில்லை. அவர்களில் பலர் எந்த அணி கோப்பையை வெல்லும்? எந்தெந்த அணிகளுக்கு பிளே-ஆப் செல்லும் வாய்ப்புகள் உண்டு? மற்றும் எந்தெந்த அணியின் வீரர்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்படுவர்? என அனைத்துவித கணிப்புகளையும் வெளியிட்டுள்ளனர்.

கடந்த 2021 ஐபிஎல் சீசனுடன் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ஆர்சிபி வீரர் ஏபி டி வில்லியர்ஸ், இந்த வருடம் முதல்முறையாக ஐபிஎல் போட்டிகளுக்கு கமெண்ட்ரி செய்கிறார். குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு முன்பு கமென்டரி செய்து வந்த டி வில்லியர்ஸ், எந்த நான்கு அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் என்று கணித்துள்ளார்.

அதில், “ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு செல்வது உறுதி. அவர்களது சொந்த மைதானங்களில் மற்ற அணிகள் வெற்றி பெறுவது மிகவும் கடினம் என்பதால் சொந்த மைதானத்தின் பலம்கொண்டு பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 லீக்கில் கோப்பையை பெற்றுக் கொடுத்த கேப்டன் எய்டன் மார்க்ரம், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதை கடந்துசெல்ல முடியாது. ஏனெனில் மார்க்ரம் கேப்டன் பொறுப்பில் மிகசிறப்பாக செயல்படக்கூடியவர் என்பதால், இந்த வருடம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பிளே-ஆப் சுற்றுக்கு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

இவர்களுடன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் செல்லும் என்று எண்ணுகிறேன். ஏனெனில் ஹர்திக் பாண்டியா மிகச் சிறந்த பார்மில் இருக்கிறார். அவரது ஆக்ரோஷம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. குஜராத் அணியும் ஆக்ரோஷமான அணியாக தெரிகிறது.

இந்த வருடம் நான் குறிப்பிட்ட நான்கு அணிகளும் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் என்று கணிக்கிறேன்.” எனக் கூறினார் ஏபி டி வில்லியர்ஸ்.

Mohamed:

This website uses cookies.