பேட்டிங்கில் 175 ரன்கள் இலக்கை நிர்ணயித்த ஆர்சிபி அணி, பந்துவீச்சிலும் பட்டையை கிளப்பியதால் டெல்லி அணியின் 9 விக்கெட்டுகளை தூக்கி 151 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது. 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது.
பெங்களூருவில் நடைபெற்ற 20ஆவது லீக் போட்டியில் ஆர்சிபி மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் இழந்த ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய விராட் கோலி(50) அரைசதம் அடித்து அவுட்டானார். டு பிளசிஸ் 22 ரன்கள், மஹிபால் 26 ரன்கள், மேக்ஸ்வெல் 24 ரன்கள் அடித்தனர்.
கடைசியில் வந்த சபாஷ் அகமது 20 ரன்கள் அடித்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் அடித்தது.
இந்த மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் 175 ரன்கள் இலக்கு சற்று எளிதா தெரிந்தது. இதை சேஸ் செய்ய டெல்லி அணி களமிறங்கியது. ஆர்சிபி பவுலர்கள் டெல்லி டாப் ஆர்டர் பேட்ஸ்மன்களின் விக்கெட்டை அடுத்தடுத்து வீழ்த்தி கதிகலங்க வைத்தனர். பவர்-பிளே ஆறு ஓவர்களில் 32 ரன்கள் மட்டுமே அடித்து நான்கு விக்கெட்டுகளை இழந்தது டெல்லி.
அதன் பிறகு உள்ளே வந்த அபிஷேக் போரல் 5 ரன்கள், அக்சர் பட்டேல் 21 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தனர். மிடில் ஆர்டரில் மிகச்சிறப்பாக விளையாடிய மணிஷ் பாண்டே அரைசதம் கடந்து அடுத்த பந்திலேயே அவுட் ஆனார்.
128 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து ஆல் அவுட் நோக்கி சென்று கொண்டிருந்தது டெல்லி அணி. கடைசியில் நார்கியா(23) மற்றும் குல்தீப் யாதவ்(7) இருவரும் இழுத்துப்பிடித்ததால் ஆல் அவுட் ஆவதை தவிர்த்து 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் அடித்தது டெல்லி அணி.
இருப்பினும் இலக்கை எட்ட முடியவில்லை. இறுதியாக 23 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெற்று இந்த தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.