ஆக்லாந்தில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில், இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்களான, டிம் செஃபெர்ட் மற்றும் காலின் முன்றோ ஆகியோர் தலா 12 பந்துகளுக்கு 12 ரன்களை எடுத்து வெளியேறினர்.
இதையடுத்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் 20 (17) மற்றும் டெரில் மிட்செல் 1 (2) ரன்கள் எடுத்து அவுட் ஆகினர். பின்னர் வந்த கிராண்ட்ஹோம் அதிரடியாக விளையாடி, 28 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். மற்றொருபுறம் நிதானமாக விளையாடிய ராஸ் டைலர் 42 (36) ரன்கள் எடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி, 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் குணால் பாண்ட்யா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் ஷர்மா மற்றும் ஷிகர் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக விளையாடி கேப்டன் ரோகித் ஷர்மா அரை சதம் எடுத்து ஆட்டமிழந்தார். சுழற்சி பந்துவீச்சாளர் சோதி வீசிய பந்தில் அவர் கேட்ச் ஆனார். அவரை தொடர்ந்து தவான் 30(31), விஜய் சங்கர் 14(8) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர், ரிஷப் பண்ட் உடன் தோனி ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். பண்ட் 40 (28), தோனி 20 (17) எடுக்க 18.5 ஓவரில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்று விக்கெட் வீழ்த்திய குர்ணால் பாண்ட்யா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதனால், 3 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து, இந்திய அணி தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் ரோகித் சர்மா 35 ரன்னைத் தொட்டபோது சர்வதேச டி20 போட்டியில் அதிக ரன்கள் குவித்திருந்த நியூசிலாந்து பேட்ஸ்மேன் மார்ட்டின் கப்திலை (2272) பின்னுக்குத்தள்ளி முதல் இடம்பிடித்தார்.
இந்த போட்டிக்கு முன் ரோகித் சர்மா 2238 ரன்கள் எடுத்து 2-வது இடத்தில் இருந்தார். இந்த போட்டியில் 50 ரன்கள் அடித்ததன் மூலம் 2288 ரன்கள் சேர்த்துள்ளார். ஹிட்மேன் ரோகித் சர்மா டி20 கிரிக்கெட் போட்டியில் 4 சதம், 15 அரைசதம் விளாசியுள்ளார். பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் 2263 ரன்களுடன் 3-வது இடத்தில் உள்ளார்.