ராஜஸ்தான் – பெங்களூர் போட்டியில் இந்த அணியின் வெற்றி உறுதி… அம்பத்தி ராயுடு ஆரூடம்
ராஜஸ்தான் ராயல்ஸ் – பெங்களூர் இடையேயான எலிமினேட்டர் போட்டியில் பெங்களூர் அணியே வெற்றி பெறும் என முன்னாள் கிரிக்கெட் வீரரான அம்பத்தி ராயுடு ஆரூடம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் துவங்கிய 17வது ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் லீக் போட்டிகள் முடிவில் கொல்கத்தா, ஹைதராபாத், ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் ஆகிய நான்கு அணிகள் அடுத்த சுற்றான ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட அணிகள் ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறின.
இதில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் கொல்கத்தா – ஹைதராபாத் இடையேயான முதல் குவாலிபயர் போட்டி 21ம் தேதியும், மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் இருக்கும் பெங்களூர் – ராஜஸ்தான் ராயல்ஸ் இடையேயான எலிமினேட்டர் போட்டி 22ம் தேதியும் நடைபெற உள்ளது.
இந்தநிலையில், நடப்பு ஐபிஎல் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் கிரிக்கெட் வீரரான அம்பத்தி ராயூடு, ராஜஸ்தான் – பெங்களூர் இடையேயான போட்டியில் பெங்களூர் அணியே வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அம்பத்தி ராயூடு பேசுகையில், “என்னை பொறுத்தவரையில் ராஜஸ்தான் அணியுடனான எலிமினேட்டர் போட்டியில் பெங்களூர் அணியே வெற்றி பெறும். பெங்களூர் அணி மிக சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்தி வருகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. சென்னை அணிக்கு எதிரான போட்டியிலும், ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் பெங்களூர் அணியின் வெற்றி மிக சிறப்பானது. தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வெற்றி பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள பெங்களூர் அணி, தனக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பை நிச்சயம் வீணடித்துவிடாது என்றே கருதுகிறேன். கடந்த போட்டிகளின் முடிவின் மூலம் கிடைத்துள்ள நம்பிக்கை மற்றும் உத்வேகத்துடன் பெங்களூர் அணி ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொள்ளும். பெங்களூர் அணியின் அனைத்து வீரர்களும் தங்களது பங்களிப்பை சரியாக செய்து வருவதால் பெங்களூர் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என கருதுகிறேன்” என்றார்.
மேலும் பேசிய அம்பத்தி ராயூடு, “விராட் கோலி நிச்சயமாக இந்த வாய்ப்பை வீணடித்துவிட விரும்பமாட்டார். இந்த வருடம் எப்படியாவது கோப்பையை வென்றாக வேண்டும் என்பதில் விராட் கோலி உள்பட பெங்களூர் அணியின் அனைத்து வீரர்களும் நம்பிக்கையுடன் காத்திருப்பார்கள். பெங்களூர் அணி தொடர்சியாக 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள அதே நிலையில், மறுபுறம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியோ கடந்த சில போட்டிகளில் கடுமையாக சொதப்பி வருகிறது. கடந்த சில போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளதால் அந்த அணி வீரர்கள் குழப்பத்தில் இருப்பார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட வலுவான அணிகளை பெங்களூர் அணி அசால்டாக வீழ்த்தி அதன் மூலம் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளதால் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் மீது அதிக அழுத்தம் இருக்கும். பெங்களூர் அணி சிறு வாய்ப்பை வீணடிக்காமல் செயல்படும் என்பதால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான எலிமினேட்டர் போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெறுவதற்கே வாய்ப்புகள் அதிகம் என நான் முழுமையாக நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.