இந்தியா அணி இந்த டெஸ்ட் தொடரை ஒயிட்வாஷ் செய்யும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் முன்னாள் தேர்வு குழு அதிகாரி சரண்தீப் சிங்.
3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக செயல்பட்டு 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. செஞ்சூரியன் மைதானத்தில் இதுவரை எந்த ஆசிய அணியும் வெற்றி பெற்றதில்லை. அத்தகைய மகத்தான சாதனையை இந்திய அணி நிகழ்த்தி வரலாறு படைத்திருக்கிறது.
இதற்கு முக்கிய காரணமாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு மற்றும் கே எல் ராகுல் மயங்க் அகர்வால் ஜோடியின் பார்ட்னர்ஷிப் இரண்டும் பார்க்கப்படுகிறது.
போட்டி முடிந்த பிறகு கேப்டன் விராட்கோலி கொடுத்த பேட்டியில் இந்த இரண்டையும் குறிப்பிட்டு வெற்றிக்கான காரணமாக பேசினார். கேஎல் ராகுல் தனது பேட்டியின் போது இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர்கள் செயல்பட்ட விதத்தை மற்றும் பயிற்சியின் போது அவர்களின் செயல்பாடு இரண்டையும் குறிப்பிட்டு வெற்றிக்கான காரணமாக பேசினார்.
இந்திய அணி வெளிநாட்டு மைதானங்களில் தொடர்ந்து பல வெற்றிகளை குவித்து வருவதற்கு, இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்களின் செயல்பாடு முக்கிய காரணம் என்றும் பலரும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடரிலும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தும் விதத்தை பார்க்கையில், 3-0 என்ற கணக்கில் இந்தியா இந்த தொடரை கைப்பற்றும் என தனது கணிப்பில் கூறியிருக்கிறார் முன்னாள் இந்திய தேர்வு குழு அதிகாரி சரண்தீப் சிங்.
“தென்ஆப்பிரிக்க அணியில் எல்கர் மற்றும் மார்க்ரம் இருவர் மட்டுமே தாக்குப் பிடிக்கும் அளவிற்கு பேட்டிங் செய்து வருகின்றனர். மிடில் ஆர்டரில் பவுமா மற்றும் டி காக் இருவரும் நன்றாக விளையாடக் கூடியவர்கள்.
டி காக் திடீரென டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார். எனவே துவக்க வீரர்களின் விக்கெட்டை இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் கைப்பற்றி விட்டால், மீதம் இருக்கும் வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்துவிடுவர். இதனால் இந்திய அணி எளிதாக தென்னாப்பிரிக்காவை குறைந்த ரன்களுக்குள் சுருட்டிவிட முடியும். மீதமிருக்கும் இரண்டு போட்டிகளிலும் நிச்சயம் இந்தியா வெற்றியை பெறும்.
முதல் போட்டி மழை காரணமாக ஐந்தாவது நாள் வரை சென்றிருக்கிறது. இல்லையெனில் இந்திய அணி மூன்று நாட்களுக்குள் இந்த போட்டியை முடித்திருக்கும்.” என்றார்.