இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, மூன்று ஆட்டங்களில் 13 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதால், சச்சின் தெண்டுல்கரின் பாராட்டை பெற்றுள்ளார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமிக்கு, புவனேஷ்வர் குமார் காயத்தால் அவதிப்பட்டு வருவதால் கடைசி மூன்று போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை கிடைத்தது.
தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நான்கு விக்கெட்டும், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான நான்கு விக்கெட்டும், நேற்று இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து விக்கெட்டுக்களும் கைப்பற்றினார். மூன்று போட்டியில் 13 விக்கெட்டு வீழ்த்தியுள்ளார்.
சிறப்பாக பந்து வீசி வரும் ஷமியை சச்சின் தெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.
முகமது ஷமியின் பந்து வீச்சு குறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘கடந்த மூன்று போட்டிகளில் முகமது ஷமியின் பந்து வீச்சை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது. முதல் ஸ்பெல்லை பார்க்க அபாரமாக இருந்தது. குறிப்பாக சீம் பொஷிசனில் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டார். வரும் போட்டிகளில் உங்களுக்கு அதிர்ஷ்டம் கைக்கொடுக்கும்’’ என்றார்.
உலககோப்பை தொடரில் 3 ஆட்டங்களே விளையாடினாலும் டாப் 5 பட்டியலில் இடம்பிடித்துவிட்டார் ஷமி. ஸ்டார்க் போல 8 ஆட்டங்களில் விளையாடியிருந்தால் எத்தனை விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பாரோ?
| எண் | வீரர் | இன்னிங்ஸ் | விக்கெட்டுகள் | 5 விக்கெட்டுகள் | எகானமி |
| 1. | ஸ்டார்க் (ஆஸ்திரேலியா) | 8 | 24 | 2 | 5.01 |
| 2. | ஃபெர்குசன் (நியூஸிலாந்து) | 7 | 17 | 0 | 4.96 |
| 3. | முகமது அமிர் (பாகிஸ்தான்) | 7 | 16 | 1 | 4.95 |
| 4. | ஆர்ச்சர் (இங்கிலாந்து) | 8 | 16 | 0 | 5.01 |
| 5. | ஷமி (இந்தியா) | 3 | 13 | 1 | 4.77 |
இங்கிலாந்து, இந்தியா இடையேயான உலகக்கோப்பை போட்டியின் முக்கியமான லீக் ஆட்டம் எட்ஜ்பாஸ்டன் நகரில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் சேர்த்தது. 338 ரன்கள் வெற்றி இலக்காகக் கொண்டு ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் சேர்த்து 31 ரன்களில் தோல்வி அடைந்தது.
தோனி 31 பந்துகளில் 42 ரன்களும், கேதார் ஜாதவ் 13 பந்துகளில் 12 ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
போட்டி முடிந்த பின் கேப்டன் விராட் கோலி ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
”நாங்கள் பேட்டிங்கில் சிறப்பாகச் செயல்பட்டோம் என்று நினைக்கவில்லை. ஏனென்றால், ஆடுகளம் தட்டையாக இருந்தது. இலக்கை விரட்டும் வகையில், ஸ்கோரை அடித்தோம், நெருங்கினோம். ஆனால், இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு மிகச்சிறப்பாக இருந்தது.
ஒருவேளை நாங்கள் பேட்டிங்கில் சிறப்பாகச் செயல்பட்டிருந்தால், முக்கியமான விக்கெட்டுகளை இழந்திருக்கமாட்டோம். போட்டியின் முடிவும் வித்தியாசமானதாக மாறியிருக்கும். வெற்றி பெறுவதற்கு எங்களுக்கு நல்ல வாய்ப்பு இருந்தது. பாண்டியா, பந்த் இருக்கும்போது அடித்த சில ஷாட்களால், ஆட்டம் இலக்கை நோக்கி நெருங்கியது. இவ்வாறு விராட் கோலி தெரிவித்தார்.