டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் விளையாடி பயிற்சி பெற்று, ஒரு போட்டிக்கு ரூ.250 முதல் ரூ.500 வரை ஊதியம் பெற்ற வீரர் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காகத் தேர்வாகியுள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பெங்களூருவில் நடக்கும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடுகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணிக்குத் தேர்வாகி இருந்த வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி உடற்தகுதித் தேர்வில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக டெல்லியைச் சேர்ந்த நவ்தீப் ஷைனி தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நவ்தீப் ஷைனிதான் ஒரு நேரத்தில் டென்னிஸ் பந்தில் மட்டும் கிரிக்கெட் விளையாடி, ஒரு போட்டிக்கு ரூ250 முதல் ரூ.500வரை ஊதியம் பெற்று டெல்லியில் காலத்தை ஓட்டிக்கொண்டிருந்தார். கடந்த 2013-ம் ஆண்டுவரை நவ்தீப் ஷைனியின் நிலைமை நாள்தோறும் டெல்லி ரோஷ்னஹாரா கிரிக்கெட் மைதானத்துக்கு வந்து பந்துவீச்சுப் பயிற்சி மேற்கொள்வது , யாராவது கிரிக்கெட் விளையாட அழைத்தால், ரூ.250 முதல் ரூ.500 வரை பணத்தைப் பெற்றுக்கொண்டு கிரிக்கெட் விளையாடச் செல்வது இதுதான் வாழ்க்கையாக இருந்தது.
ஆனால், நவ்தீப் ஷைனியின் திறமையைப் பார்த்த கவுதம் கம்பீர் அவருக்கு முறைப்படியான பயிற்சியை கிரிக்கெட் அகாடெமியில் சேர்த்து அளித்துள்ளார். அதுவரை டென்னிஸ் பந்தில் பந்துவீசிய நவ்தீப் முதல்முறையாக சிவப்புநிற லெதர் பந்தில் பந்துவீசினார்.
தான் இந்திய அணிக்கு தேர்வானது குறித்து நவ்தீப் ஷைனி உருக்கத்துடன் கூறியதாவது:
நான் முதன்முதலில் சிவப்புநிற லெதர் பந்தில் பந்துவீச மிகவும் கூச்சமாக இருந்தது. அப்போது எனக்கு ஊக்கம் கொடுத்த கவுதம் கம்பீர், ரப்பர் பந்தில் பந்துவீசுகிறோம் என நினைத்து அதுபோலவே வீசு அனைத்தும் சரியாக வரும் என்று கூறினார். அதன்படி பந்துவீசினேன் என் பந்துவீச்சைக் கண்டு அனைவரும் திகைத்துவிட்டனர். கம்பீர் அன்று எனக்குக் கொடுத்த ஊக்கம் தான் இப்போது இந்திய அணியில் இடம் பெற்று இருக்கிறேன்.
எனக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை. கம்பீரைப் பற்றி நான் பேசினாலே எனக்குக் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது. என் வாழ்க்கைக்கு ஒளி ஏற்றியவர் கம்பீர். நான் ஹரியானாவைச் சேர்ந்தவன். ஆனால், டெல்லி அணியில் இடம் பெற வைக்க எனக்குக் கம்பீர்தான் பல்வேறு உதவிகள் செய்தார். எனக்குப் பந்துவீச்சு பயிற்சி அளித்து, அதை அதிகாரிகளை பார்க்கச் செய்து, டெல்லி அணியில் வாய்ப்பு அளிக்கக் காரணமாக அமைந்தார்.
அதேபோலவே ஆஷிஸ் நெஹ்ரா, மிதுன் மன்ஹாஸ், சுமித் நர்வால் ஆகியோரும் எனக்கு ஆதரவாக இருந்து டெல்லி அணியில் இடம் பெற காரணமாக இருந்தனர். நான் டெல்லி அணிக்காகத் தேர்வான பின் நான் விளையாடிய போட்டிகளைப் பார்த்த கம்பீர், தொடர்ந்து நீ பயிற்சி செய்தால், நிச்சயம் இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்படுவாய் என்று அடிக்கடி கூறுவார். அவரின் வார்த்தைகள் இப்போது கண்முன் தெரிகிறது. அவரின் வார்த்தைகள் இன்று பலித்துவிட்டன. இந்திய அணிக்காகத் தேர்வாகி இருக்கிறேன்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கை தொடருக்காக என்னை வலைபயிற்சியில் பந்துவீச அழைத்திருந்தனர். ஆனால், ரஞ்சிக் கோப்பை இறுதிப்போட்டியில் கவனம் செலுத்து எனக் கம்பீர் அனுப்பிவிட்டார்.
இதற்கிடையே இந்திய ஏ அணிக்காகவும் நான் விளையாடி இருக்கிறேன். தென் ஆப்பிரிக்காவில் நான் விளையாடிய போது, எனக்கு ராகுல் டிராட் ஏராளமான நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்தார். ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணியில் இடம் பெற்று ஆஷிஸ் நெஹ்ராவின் ஆலோசனைகளை நன்கு பயன்படுத்திக்கொண்டேன். என் பந்துவீச்சில் வேகத்தையும், ஸ்விங் செய்யும் தன்மையையும், பல்வேறு வகைகளையும் நெஹ்ராவிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.
இவ்வாறு ஷைனி தெரிவித்தார்.