இந்திய அணியின் விக்கெட் கீப்பரான பார்தீவ் பட்டேல் 13 ஆண்டுகள் கழித்து வெளிநாட்டு மண்ணில் களம் இறங்கியுள்ளார்.
32 வயதாகும் பார்தீப் பட்டேல் இந்திய டெஸ்ட் அணியில் கடந்த 2002-ம் ஆண்டு தனது 17 வயதில் அறிமுகமானார். நாட்டிங்காமில் 2002-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார்.
இளம் வயது என்பதால் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பர் பணியில் சிறப்பான வகையில் ஜொலிக்க முடியவில்லை. பின்னர் டோனி வருகையால் விக்கெட் கீப்பர் பணி என்பது கடினமாகிவிட்டது. ஆனால் முதல்தர போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது நிலையை தக்கவைத்துக்கொண்டார். முதல்தர போட்டியில் 10 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்.
டோனி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றபின்னர், சகா விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். சகாவிற்கு காயம் ஏற்பட்டதால் பார்தீவ் பட்டேல் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார்.
இதனடிப்படையில்தான் 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான மொகாலி டெஸ்டில் களம் இறங்கினார். சுமார் 8 வருடங்கள் கழித்து அணியில் இடம்பிடித்தார்.
தற்போது செஞ்சூரியனில் சகாவிற்குப் பதிலாக பார்தீவ் பட்டேல் இடம்பிடித்துள்ளார். இவர் கடைசியாக வெளிநாட்டு மண்ணில் கடந்த 2004-ம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்டில் இடம் பிடித்திருந்தார். அதன்பின் தற்போது 14 ஆண்டுகளுக்குப் பின் வெளிநாட்டு மண்ணில் பார்தீவ் பட்டேல் விளையாடுகிறார்.
2016-17 ரஞ்சி சீசனில் குஜராத் அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.