அனுபவ வீரர் விராட் கோலியை விட்டுவிட்டு எதற்காக கேஎல் ராகுலுக்கு ஒருநாள் தொடரில் கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய அணி தென் ஆப்பிரிக்கா சென்று முதல் கட்டமாக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டெஸ்ட் தொடருக்கு பிறகு ஜனவரி 19ஆம் தேதி ஒருநாள் தொடர் துவங்க இருக்கிறது.
இதற்கான இந்திய அணி கடந்த 31ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. காயம் காரணமாக விளையாடாமல் இருந்த ரோகித் சர்மா தற்போது ஒருநாள் போட்டிகளிலும் விளையாடவில்லை. கேப்டன் பொறுப்பில் இருந்த அவர் இடம்பெறாததால் புதிய கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டிருக்கிறார். அத்துடன் துணைக் கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ஒருநாள் தொடரில் விராட் கோலி இடம் பெற்றிருக்கும் பொழுது அவரை விட்டுவிட்டு எதற்காக ராகுலுக்கு இந்த கேப்டன் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கேள்விகள் தொடர்ந்து முன் வைக்கப்பட்டு வந்தன. இதற்கு பதில் அளிக்கும் விதமாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில்,
“இந்திய அணியில் ஒரு பழக்கம் இருக்கிறது. ஒருவரிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்ட பிறகு, மீண்டும் அவரிடம் கேப்டன் பதவி கொடுப்பது இல்லை. மீதமிருக்கும் வீரர்களில் யார் தகுதியானவர்கள் என பார்த்து, அதன் அடிப்படையில் ராகுலுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், வருங்காலத்தில் யாரை கேப்டனாக நியமிக்க வேண்டும் என பிசிசிஐ முடிவு செய்கிறதோ, அவரை தற்போது இருக்கும் கேப்டன் இல்லாதபோது புதிய கேப்டனாக நியமித்து பரிசோதித்து பார்க்கும் வழக்கம் உண்டு.
இதற்கு முன்னதாக மூத்த வீரர்கள் கேப்டன் பதவியில் இருந்து விலகிய போது, இன்னும் சில மூத்த வீரர்கள் அணியில் இருக்கையில் தோனியிடம் புதிய கேப்டன் பதவி கொடுக்கப்பட்டது. முதலில் சிறிய அணியுடன் பரிசோதித்துப் பார்த்து பிறகு முழு கேப்டனாகவும் அவரை நியமித்தது. அதுபோன்ற ஒரு நிலையில் தற்போது கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டிருக்கிறார். தென் ஆப்பிரிக்க அணி முழு பலத்துடன் இல்லை. ஆகையால் இப்போதைக்கு அவரை நியமித்து பரிசோதித்துப் பார்ப்பது சரி என பிசிசிஐ முடிவு செய்திருக்கிறது. இந்த முடிவு முற்றிலும் வரவேற்கத்தக்கது.” என தனது பேட்டியில் அவர் கூறினார்.