புதிய கிரிக்கெட் அணியை வாங்கி அமெரிக்க கிரிக்கெட்டிலும் கால்பதிக்க போகும் இந்திய நடிகர் !
கிரிக்கெட் விளையாட்டு உலகம் முழுவதும் பிரபலமாக இருந்தாலும் அமெரிக்கா ரஷ்யா போன்ற உலக வல்லாதிக்க நாடுகளின் அந்த விளையாட்டு பிரபலம் இல்லை. இதன் காரணமாக கடந்த 10 வருடங்களாக அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாட்டை பிரபலப்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகிறது. அங்கு வாழும் இந்திய வம்சாவளியினர் அமெரிக்கா அணியில் இணைந்து தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.
இதன் பின்னணியில் அமெரிக்காவில் கிரிக்கெட்டை மேலும் பிரபலப்படுத்த ஐபிஎல் தொடரை போன்ற ஒரு கிரிக்கெட் லீக் தொடங்கப்பட உள்ளது. 6 அணிகள் பங்கேற்கும் மேஜர் பிரீமியர் லீக் துவங்கப்பட இருக்கிறது. 2022ஆம் ஆண்டின் முதல் டி20 லீக் தொடராக இந்த போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது. இதற்காக தற்போது வேலைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இந்தி நடிகர் ஷாருக்கான் மற்றும் நடிகை ஜூகி சாவ்லா ஆகியோர் இந்த 6 அணிகளில் ஒரு அணியை வாங்க முடிவு செய்திருக்கின்றனர். இதற்காக இந்த போட்டிகளை நடத்தும் அமெரிக்கன் கிரிக்கெட் என்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் ஷாருக்கான் நடத்தும் நைட்ரைடர்ஸ் நிறுவனம் கைகோர்க்கிறது.
மேலும் ஒரு அணியை வாங்குவது மட்டுமல்லாது இந்த தொடரை நடத்துவது குறித்த ஆலோசனைகளையும் திட்டங்களையும் வகுத்து கொடுக்க மற்றும் கிரிக்கெட்டை பிரபலப்படுத்த ஷாருக்கான் உதவுவார். ஷாருக்கான் வாங்கப்போகும் அணி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை மையமாகக் கொண்டு இருக்கப் போகிறது.
இதுகுறித்து நைட்ரைடர்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி கூறுகையில் “அமெரிக்காவில் அடுத்த சில ஆண்டுகளில் சர்வதேச தரத்திலான 6 கிரிக்கெட் மைதானங்களை உருவாக்கப் போகிறோம். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை அமெரிக்காவில் நடத்த வேண்டும் என்பதே எங்களது குறிக்கோள். இங்கே கிரிக்கெட் விளையாட்டை மிக எளிதாக பிரபலப்படுத்த முடியும்” என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும் ஷாருக்கான் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியையும் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடக்கும் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் திரின்பாகோ நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளை வாங்கி உரிமையாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.