தனது வயது பற்றிய சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஷாகித் அப்ரிதி.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் ஷாகித் அப்ரிதி. இவர் பத்திரிகையாளர் வஜஹத் கானுடன் இணைந்து, ’கேம் சேஞ்சர்’ (Game Changer) என்ற சுயசரிதை நூலை எழுதியுள்ளார். இதில் பாகிஸ்தான் அணிக்காக, சுமார் 20 ஆண்டுகள் விளையாடிய அனுபவம், கிரிக்கெட் வாரிய பிரச்னைகள், முன்னாள் கேப்டன்கள், அணிக்குள் இருந்த சர்ச்சைகள் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து எழுதியுள்ளார். இந்நிலையில் அவர் தனது வயது பற்றிய சர்ச்சைக்கும் இதில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
1996 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார் அப்ரிதி. 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1716 ரன் எடுத்துள்ள அவர், 398 ஒரு நாள் போட்டிகளில் 8064 ரன்கள் எடுத்துள்ளார். 395 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். 99 டி20 போட்டிகளிலும் அவர் விளையாடியுள்ளார்.
அறிமுகமான ஆண்டிலேயே நைரோபியில் நடந்த இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 37 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தார். அப்போது அவர் வயது 16 ஆண்டு 217 நாட்கள் என்று பதிவானது. ஆனால் அப்போதே இதில் சர்ச்சை எழுந்தது. இதே போல அவர் வயது பற்றி அடிக்கடி சர்ச்சைகள் வந்து போகும்.
இந்நிலையில் தனது வயது பற்றிய உண்மையை அவர் இப்போது சுயசரிதை நூலில் தெரிவித்துள்ளார். ‘37 பந்துகளில் சதம் அடித்தபோது என் வயது 16 அல்ல, பத்தொன்பது. 1975-ம் ஆண்டில் நான் பிறந்தேன். அதிகாரிகள் எனது வயதை தவறாகக் குறித்துவிட்டார்கள்’ என்று தெரிவித் துள்ள அப்ரிதி, பிறந்த தேதி, மாதம் பற்றிய தகவல்களைத் தெரிவிக்கவில்லை. ஆனால் அவரது பயடேட்டாவில் அவர் பிறந்த வருடம் 1980 என்றே உள்ளது.
2016-ம் ஆண்டு பாகிஸ்தானுக்காக, கடைசியாக டி20 போட்டியில் ஆடினார் அப்ரிதி. அப்போது அவர் வயது 36 என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், அப்போது அவர் வயது 40 அல்லது 41 ஆக இருந்திருக்கும். அப்ரிதியின் வயது சர்ச்சை கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் அவர் தன் சுய சரிதையில் குழப்பமாக, “ரெக்கார்டின் படி எனக்கு அப்போது 19 வயது, 16 அல்ல. நான் 1975ல் பிறந்தவன். ஆம் அதிகாரிகள் என் வயதைத் தவறாகக் குறிப்பிட்டார்கள்” என்று கூறியுள்ளார்.
1975 என்றால் 1996 அறிமுகம் ஆகிறார் எனும்போது வயது 20, அல்லது 21 ஆக இருக்க வெண்டும். அப்ரீடி குறிப்பிட்டது போல் 19ஆக இருக்க முடியாது.
இதில் இன்னொரு விவகாரம் என்னவெனில் நைரோபிக்கு முதல் சர்வதேச போட்டியில் ஆடுவதற்கு முன்பாக மே.இ.தீவுகளில் பாகிஸ்தான் அண்டர்-19 அணியில் இடம் பெற்று ஆடிவந்தார், இப்போது அப்ரீடி வெளியிட்ட உண்மையான பிறந்த ஆண்டின் படி பார்த்தால் அவர் அண்டர்-19 அணியிலும் இடம்பெற்றிருக்கக் கூடாது.
இப்போது பாகிஸ்தான் பிரிமியர் லீகில் அவர் ஆடிய போது அவரது உண்மையான வயது 43 அல்லது 44ஆக இருக்க வேண்டும். 2010-ல் அவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து திடீர் ஓய்வு அறிவித்த போதே அவருக்கு 35 வயது என்றாகிறது. மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்து கடைசியாக 2016 உலக டி20யில் ஆடும்போது அவருக்கு வயது 41 ஆக இருக்க வேண்டும்.
இப்போது அஃப்ரீடியின் சாதனைகள் அவர் மிகவும் சிறிய வயதில் செய்ததற்காகவா அல்லது வயதான பிறகு செய்ததற்காகவா? இதன் அடுத்த கட்ட பிரச்சினைகள் எப்படித் திரும்பும் என்பது கிரிக்கெட் உலகின் வரும் சில நாட்களில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.வ்