சென்னை சேப்பாக்கம் மைதான ஆடுகளத்தை விமர்சித்த முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கெல் வாகனுக்கு, நெட்டிசன்கள் சரியான பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்தியா இங்கிலாந்து இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரண்டாவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
முதல் போட்டி நடைபெற்ற அதே சேப்பாக்கம் மைதானத்திலேயே இரண்டாவது போட்டியும் நடைபெற்று வருவதால், இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணியே வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்து வீரர்களோ இந்திய அணியை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் மாஸ் காட்டி வரும் இந்திய அணி இந்த போட்டியில் கிட்டத்தட்ட வெற்றி வாய்ப்பை உறுதி செய்துவிட்டது.
இந்த தொடர் துவங்கும் முன், இந்திய அணியால் ஒரு போட்டியில் கூட வெல்ல முடியாது என கணித்திருந்த முன்னாள் வீரர்கள் பலர், இங்கிலாந்து அணியின் இந்த தடுமாற்றத்திற்கு காரணம் கண்டுபிடிக்க துவங்கிவிட்டனர். இதில் பலர் சென்னை ஆடுகளத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதில் முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கெல் வாகன் முக்கியமானவர்.
இந்திய அணியால் இங்கிலாந்தை வீழ்த்தவே முடியாது என்ற நம்பிக்கையில் ஓவராக பேசி வந்த மைக்கெல் வாகன், சென்னை ஆடுகளம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் “சென்னை ஆடுகளம் மிக மோசமானது. இது ஐந்து நாட்கள் விளையாட கூடிய பிட்ச் இல்லை, இதற்கு எந்த காரணமும் இந்திய அணி கூற கூடாது” என்று பதிவிட்டிருந்தார்.
மைக்கெல் வாகனின் இந்த ட்வீட்டிற்கு சேன் வார்ன், சுனில் கவாஸ்கர் போன்ற முன்னாள் வீரர்கள் பலர் தகுந்த பதிலடி கொடுத்து வரும் நிலையில், மறுபுறம் கிரிக்கெட் ரசிகர்களும் தங்கள் பங்கிற்கு மைக்கெல் வாகனை வச்சு செய்து வருகின்றனர்.