2021 ஐபிஎல் இறுதிப் போட்டியில் தோனி தன்னிடம் பேசிய சில வார்த்தைகளுக்கு பிறகு, ஆட்டத்தில் என்ன நடந்தது? எப்படி கப் ஜெயித்தோம்? என்பது பற்றி மனம் திறந்து பேசியுள்ளார் ஷர்துல் தாக்கூர்.
2021 ஆம் ஆண்டு ஐ பி எல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரு அணிகளும் துபாய் மைதானத்தில் மோதின. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 192 ரன்கள் அடித்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து வந்தது. அபாரமான துவக்கம் இந்த அணிக்கு அமைந்ததால், விக்கெட் எடுக்க முடியாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சாளர்கள் திணறி வந்தனர்.
அந்த நேரத்தில் பந்துவீச்சாளர்களிடம் ஓரிரு வார்த்தைகள் மகேந்திர சிங் தோனி பேசினார். பொதுவாக இக்கட்டான சூழலில்தான் தோனி இது போன்ற பேச்சு வார்த்தைகளை பந்துவிச்சாளர்களிடம் நடத்துவார். அதன் பிறகு ஆட்டம் மீண்டும் தோனி தலைமையிலான அணிக்கு திரும்பும். அது போன்று அன்றைய நாளும் தோனி பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பக்கம் திரும்பியது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் மட்டுமே அடித்திருந்தனர். கொல்கத்தா அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. நான்காவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை தட்டிச் சென்றது.
தன்னுடைய சமீபத்திய பேட்டி ஒன்றில், 2021 ஆம் ஆண்டு ஐ பி எல் கோப்பை வென்றது பற்றி மனம் திறந்து பேசிய தாக்கூர், இறுதி போட்டியில் தான் பந்துவீசி கொண்டிருந்த போது தோனி என்னிடம் என்ன கூறினார் என்பதை கூறியுள்ளார். அப்போது பேசிய அவர், “தோனி அந்த சமயத்தில் என்ன நினைத்துக் கொண்டிருந்தார் என்று எனக்கு தெரியவில்லை. உடனடியாக பிராவோ வை லாங்-ஆஃப் திசைக்கு அனுப்பினார். அதன் பிறகு மிட்-விக்கெட் வட்டத்திற்கு உள்ளே ஒரு வீரர் இருக்க வேண்டும் என்று கூறினார். அதன் பிறகு, என்னிடம் நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டார். நான் உடனடியாக நீங்கள் என்ன சொன்னாலும் சரி அதற்கு ஏற்றார் போல நான் பந்து வீசுகிறேன் என்று கூறிவிட்டேன். இப்படி திட்டமிட்ட பிறகு அடுத்த பந்து என்னை இப்படி வீசச் சொன்னார். அதன்படி செய்தேன்.
உடனடியாக வெங்கடேஷ் ஐயர் ஆட்டம் இழந்தார். அதற்கு அடுத்த பந்தில் நித்திஷ் ரானா ஆட்டம் இழந்தார். உடனடியாக சென்னை அணியின் பக்கம் ஆட்டம் திரும்பியது. தொடர்ந்து மற்ற வீரர்களின் விக்கெட்டுகளையும் வீழ்த்தி சென்னை அணிக்கு வெற்றியை பெற்று தந்தார்கள். அந்த தருணத்தில் மீண்டும் ஒருமுறை நான் உணர்ந்து கொண்டேன். தோனியை எதற்காக அனைவரும் உயர்ந்த மனிதர் சிறந்த மனிதர் என்று புகழ்கிறார்கள் என. இப்படி ஒரு இறுக்கமான சூழலில் தெளிவான முடிவுகளை அவர் எடுக்கிறார்.
அதற்கு முந்தைய வருடம் ஒரு ரன்னில் கோப்பையை தவற விட்டோம். அதற்கு முக்கிய காரணமாக நானும் இருந்திருக்கிறேன். அது எனக்கு மனதளவில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. அதற்கு அடுத்த வருடமே மீண்டும் கோப்பையை வென்றதில் மிகுந்த மகிழ்ச்சியை நான் அடைந்தேன்.” என்று மனம் திறந்து பேசினார்