கிங் கோலி செஞ்சுரிக்கு சுப்மன் பதிலடி செஞ்சுரி… ஆர்சிபி அணியின் பிளே-ஆப் கனவு காலி… சுப்மன் கில் ஒன்மேன் ஷோவால் குஜராத் அபார வெற்றி!

ஒத்தையாக நின்று சதமடித்து ஆர்சிபி அணியை வீழ்த்த உதவினார் சுப்மன் கில். ஆர்சிபி பிளே-ஆப் கனவு தகர்ந்தது.

பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற முக்கியமான லீக் போட்டியில் ஏற்கனவே பிளே-ஆப் சுற்றுக்குள் சென்ற குஜராத் அணியை எதிர்கொண்டது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.

ஆர்சிபி அணி இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெற முடியும். இல்லையெனில் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே-ஆப் சுற்றுக்குள் சென்றுவிடும் என்கிற நிலையிலும் இருந்தது.

முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணிக்கு விராட் கோலி மற்றும் டு பிளசிஸ் இருவரும் 67 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். டு பிளசிஸ் 28 ரன்களுக்கு அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்கள் சொற்பரன்களுக்கு ஆட்டமிழக்க, மிடில் ஆர்டரில் பிரேஸ்வெல் 26 ரன்கள் அடித்து விராட் கோலியுடன் பாட்னர்ஷிப் அமைத்துக்கொடுத்து அவுட்டானார்.

அவர் வெளியேறிய பிறகு அனுஜ் ராவத் உள்ளே வந்து 15 பந்துகளில் 23 ரன்கள் அடித்து நன்றாக பினிஷ் செய்ய உதவினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த விராட் கோலி 60 பந்துகளில் சதம் விளாசினார். 61 பந்துகளில் 101 ரன்கள் அடித்து இறுதிவரை களத்தில் நின்றார். ஐபிஎல் வரலாற்றில் இவர் அடிக்கும் ஏழாவது சதம் இதுவாகும்.   இலக்கை துரத்திய குஜராத் அணிக்கு விருதிமான் சகா 12 ரன்கள் அடித்து அவுட் ஆனார். இரண்டாவது விக்கெட்டிற்கு கில் மற்றும் விஜய் சங்கர் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆர்சிபி அணிக்கு தலைவலியை ஏற்படுத்தினர். இந்த ஜோடி 123 ரன்கள் சேர்த்தது. விஜய் சங்கர் 35 பந்திகளில் 53 ரன்கள் அடித்து அவுட் ஆனார்.

கடைசி 5 ஓவர்களில் 50 ரன்கள் தேவைப்பட்டபோது, உள்ளே வந்த சனக்கா டக் அவுட் மற்றும் டேவிட் மில்லர் 6 ரன்களுக்கு அவுட் ஆகினர். இதனால் குஜராத் அணிக்கு அழுத்தம் கூடியது.

மற்றொரு பக்கம் அழுத்தம் எதையும் எடுத்துக்கொள்ளாமல் அதிரடியாக விளையாடிவந்த சுப்மன் கில் 8 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகள் விளாசினார். இதன் மூலம் 52 பந்துகளில் 104 ரன்கள் அடித்து போட்டியை குஜராத் அணியின் பக்கம் பினிஷ் செய்து கொடுத்தார் கில். 19.1 ஓவர்களில் 198 ரன்கள் அடித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது குஜராத் டைட்டன்ஸ்.

பிளே-ஆப் கனவுடன் உள்ளே வந்த ஆர்சிபி அணி, தோல்வியை தழுவி ஏமாற்றத்துடன் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெற முடியாமல் வெளியேறியது. ஆர்சிபி அணியின் இந்த தோல்வியால் 16 புள்ளிகளில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

குவாலிபையர்-1ல் குஜராத் மற்றும் சிஎஸ்கே அணிகளும், எலிமினேட்டர் போட்டியில் லக்னோ மற்றும் மும்பை இந்தியன்ஸ் இரண்டு அணிகளும் மோதுகின்றன.

Mohamed:

This website uses cookies.