கிங் கோலி கணக்கு இந்த டைம் மிஸ்ஸே ஆகாது…. சிராஜ் மிரட்டல் பந்துவீச்சு.. பஞ்சாப் அணியை 150 ரன்களில் சுருட்டி ஆர்சிபி அபார வெற்றி!

முகமது சிராஜ் மற்றும் வணிந்து ஹசரங்கா இருவரும் பந்துவீச்சில் அசத்த, பஞ்சாப் கிங்ஸ் அணி 18.2 ஓவர்களில் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இறுதியில் ஆர்சிபி அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மொகாலியில் நடைபெற்ற ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து களமிறங்கியது பஞ்சாப் கிங்ஸ் அணி.

ஆர்சிபி அணிக்கு துவக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் டு பிளசிஸ் இருவரும் களமிறங்கி பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தனர். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி 16 ஓவர்கள் வரை விக்கெட்டுகளை இழக்கவில்லை. முதல் விக்கெட்டிற்கு 137 ரன்கள் சேர்த்தது. விராட் கோலி 59 ரன்கள், டு பிளசிஸ் 84 ரன்கள் அடித்து அவுட்டாகினர்.

பின்னர் வந்தவர்கள் கடைசி நான்கு ஓவர்களில் கிட்டத்தட்ட 40 ரன்கள் மட்டுமே அடித்ததால் அணியின் ஸ்கோர் 180 ரன்களை கூட எட்டவில்லை. 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் மட்டுமே அடித்தது ஆர்சிபி அணி.

இந்த மைதானத்தில் 175 ரன்கள் சற்று எளிய இலக்காக பார்க்கப்பட்டது. இதனை சேஸ் செய்வதற்கு களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஆரம்பம் சற்றும் எதிர்பார்த்தவாறு அமையவில்லை. அதர்வா 4 ரன்கள், சாட் 8 ரன்கள் மற்றும் இந்த சீசனில் முதல் போட்டியில் விளையாடிய லிவிங்ஸ்டன் 2 ரன்கள் என வரிசையாக பேட்ஸ்மேன்கள் சொற்பரன்களுக்கு ஆட்டமிழக்க, பஞ்சாப் அணியும் ஆட்டம் கண்டது.

நன்றாக விளையாடி வந்த பிரப்சிம்ரன் 46 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். இவர் போனபிறகு பேட்டிங்கில் கடைசி வரை நம்பிக்கை அளித்து வந்த ஜித்தேஷ் ஷர்மா 41 ரன்களுக்கு வீணாக விக்கெட் இழந்து  வெளியேறினார். இதனால் பஞ்சாப் அணியின் எதிர்பார்ப்பும் முடிவுக்கு வந்தது.

முகமது சிராஜ் அசத்தலான பந்துவீச்சினால் கடைசி கட்டத்தில் வரிசையாக விக்கெட்டுகளை வீழ்த்தி, பஞ்சாப் கிங்ஸ் அணி 18.2 ஓவர்களில் ஆல் அவுட் ஆவதற்கு முக்கிய பங்காற்றினார். நான்கு ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி 21 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார் சிராஜ். 2 விக்கெட்டுகளை ஹசரங்கா கைப்பற்றினார்.

Mohamed:

This website uses cookies.