கேஎஸ் பரத்துக்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் கொடுத்து, நம்பிக்கை வரவைக்கவேண்டும் என 4வது டெஸ்டுக்கு முன்பு நடந்த பிரஸ் சந்திப்பில் பேசியுள்ளார் கேப்டன் ரோகித் சர்மா.
பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் கடைசி கட்டத்தை நெருங்கியுள்ளோம். நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டையும் ஆஸ்திரேலியா அணி ஒரு போட்டியையும் வென்றது.
நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற மார்ச் ஒன்பதாம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியுற்ற கையோடு நான்காவது டெஸ்ட் போட்டிக்கு வருகிறது. அதே நேரம் ஆஸ்திரேலிய அணி தொடரில் முதல் வெற்றியைப் பெற்று புதிய உத்வேகத்துடன் இந்த டெஸ்ட் போட்டியில் களம் இறங்குகிறது.
இந்திய அணிக்கு நான்காவது டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற முடியும். அதேநேரம் ஆஸ்திரேலிய அணி கடைசி மூன்று பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரை இழந்திருக்கிறது. இம்முறை சமன் செய்வதற்கு வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. ஆகையால் இந்த வாய்ப்பை நழுவவிடாமல் சமன் செய்து தொடரை முடிக்க முயற்சிக்கும்.
நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டு மாற்றங்களுடன் களமிறங்குவதாக தகவல்கள் வெளியாகியது. அதில் ஒன்றாக கேஎஸ் பரத் வெளியில் அமர்த்தப்பட்டு இஷான் கிஷன் உள்ளே எடுத்து வரப்படலாம் என கூறப்பட்டது. ஆனால் ரோகித் சர்மா இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக கேஎஸ் பரத்துக்கு ஆதரவாக பேசியுள்ளார். அவர் கூறியதாவது:
“கேஎஸ் பரத் இப்போதுதான் நன்றாக சர்வதேச போட்டிகளில் இடம்பெற்று விளையாடி வருகிறார். அவருக்கு நிறைய வாய்ப்புகள் கொடுக்க வேண்டும். மேலும் டிஆர்எஸ் என்பது அவருக்கு முற்றிலும் புதிது. அதைப்பற்றியும் நாளுக்கு நாள் சிறப்பாக தெரிந்து கொண்டு செயல்பட்டு வருகிறார்.
மேலும் அவரது பேட்டிங்கை இப்போது விமர்சிப்பது முறையற்றது. ஏனெனில் சற்று கடினமான விக்கெட்டுகளில் நன்றாகவே பேட்டிங் செய்திருக்கிறார். அவருக்கு கூடுதல் வாய்ப்புகள் கொடுக்க வேண்டும்.” என்று ரோகித் சர்மா கூறினார்.