பகல் இரவு டெஸ்ட் போட்டி நிச்சயம் நடக்கும்; கங்குலி உறுதி !!

பகல் இரவு டெஸ்ட் போட்டி நிச்சயம் நடக்கும்; கங்குலி உறுதி

வங்காளதேச கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட்டில் விளையாடுவதற்காக நாளை இந்தியா வருகிறது. இந்தியா – வங்காளதேச அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் வருகிற 3-ந் தேதி டெல்லியில் நடக்கிறது. 10-ந்தேதியுடன் 20 ஓவர் தொடர் முடிவடைகிறது. டெஸ்ட் தொடர் நவம்பர் 14-ந்தேதி இந்தூரில் தொடங்குகிறது.

2-வது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வருகிற 22-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடக்கிறது. கொல்கத்தாவில் நடைபெறும் இந்த டெஸ்ட்டை பகல்-இரவாக நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக வங்காளதேச கிரிக்கெட் வாரியத்துக்கு பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி கடிதம் எழுதி உள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இந்த பரிந்துரையை வங்காளதேசம் ஏற்றுக் கொண்டால் இந்தியாவில் முதல் முறையாக பகல்-இரவு டெஸ்ட் போட்டி நடைபெறும்.

இந்த நிலையில் கொல்கத்தாவில் பகல்-இரவு டெஸ்ட் போட்டி நடைபெறும் என்று கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா டெஸ்ட்டை பகல்-இரவாக நடத்துவது தொடர்பாக வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஜ்முல் ஹசனுடன் நான் பேசினேன்.

பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கு வங்காளதேச கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொள்ளும் என்று நம்புகிறேன். இது தொடர்பாக வீரர்களுடன் பேச விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

இன்று இரவுக்குள் வங்காளதேசம் தனது முடிவை தெரிவிக்கும். கொல்கத்தா டெஸ்ட் பகல்-இரவாக நடைபெறும் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

இவ்வாறு கங்குலி கூறி உள்ளார்.

Mohamed:

This website uses cookies.