அடுத்த டெஸ்டில் ரஹானே, புஜாரா இருவரையும் தூக்கிவிட்டு இளம் வீரர்களை உள்ளே எடுத்து வாருங்கள் என இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடி வரும் டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரர்களான புஜாரா மற்றும் ரஹானே இருவரும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். முதல் போட்டியில் கேப்டன் விராட் கோலியும் மோசமாக விளையாடினார். மூன்று முக்கியமான வீரர்கள் தொடர்ச்சியாக சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வருகின்றனர்.

முதல் போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் புஜாரா, 0 மற்றும் 16 ரன்கள் அடித்திருந்தார். முதல் இன்னிங்சில் நன்றாக விளையாடிய ரஹானே, இரண்டாவது இன்னிங்சில் சொதப்பினார். அதேபோல் 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இருவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஆனால் இரண்டாவது இன்னிங்சில் நன்றாக விளையாடி அரைசதம் அடித்தனர்.

இருவரும் 80 டெஸ்ட் போட்டிகளுக்கும் மேல் விளையாடி உள்ளனர். நல்ல அனுபவமிக்க இவர்கள், ஏதேனும் ஒரு சில போட்டிகளில் சொதப்பினால் பரவாயில்லை. ஒவ்வொரு போட்டியிலும் இதே போன்ற தவறை செய்வதால் மிடில் ஆர்டரில் இந்திய அணிக்கு ரன்கள் வராமல், குறைந்த ரன்களில் ஆல் அவுட் ஆகிறது. இந்த இருவர் மீது மட்டும் அல்லாமல், விராட் கோலியின் மீதும் கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான்.

“ரகானே மற்றும் புஜாரா இருவரும் மிகவும் அனுபவமிக்க வீரர்கள். ஒரு சில போட்டிகளில் தவறு செய்வது இயல்பு. ஆனால் தொடர்ச்சியாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரில் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர். தற்போது தென் ஆப்பிரிக்காவிலும் அதே போன்ற தவறை செய்து வருகின்றனர். அனுபவம் இந்திய அணிக்கு தேவை என்பதால் மட்டுமே இவர்கள் தொடர்ந்து உள்ளே இருக்கின்றனர். ஷ்ரேயாஸ், மிடில் ஆர்டரில் தன்னை நிரூபித்து சதம் அடித்து விட்டார். மேலும் விகாரி மற்றும் பண்ட் இருவரும் நன்றாக விளையாடி வருகின்றனர்.

ஏதேனும் ஒரு இன்னிங்சில் மட்டும் நன்றாக விளையாடிவிட்டு, ரஹானே மற்றும் புஜாரா இருவரும் தொடர்ச்சியாக மீதமுள்ள போட்டிகளில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த தவறை செய்யாமல் ஒவ்வொரு போட்டியிலும் இருவரும் தன்னை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். விரைவில் அதனை செய்வர் என நம்புகிறேன். விராட் கோலி, புஜாரா மற்றும் ரஹானே மூன்று முக்கியமான வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும் இந்திய அணி தங்குதடையின்றி வெற்றியை முதல் டெஸ்டில் பெற்றது. இது எனக்கு மிகவும் ஆச்சரியம் அளிக்கிறது.” என்றும் இர்பான் பதான் குறிப்பிட்டார்.

Prabhu Soundar:

This website uses cookies.